Sunday, December 14, 2008

தீவிரவாதம்

நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன
மனித மாமிச வாசனைகள்
என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்

நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன

தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்
எதுவுமற்ற எலும் போட்டுடலில் இணைக்கச் சொல்லி
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று

ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக நின்று
துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி

வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்
இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்
தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று

சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்
இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ.

No comments: