Thursday, February 15, 2007

ஹஃபீஸ் கவிதை

பரிசு
***
கடவுளிடமிருந்து நான் நிறையவே
கற்றுக் கொண்டு விட்டேன்
இனி நான் என்னை
ஒரு கிறிஸ்தவன் என்றோ
ஒரு இந்து என்றோ
ஒரு முஸ்லீம் என்றோ
ஒரு பௌத்தன் என்றோ
ஒரு யூதன் என்றோ
சொல்லிக் கொள்ள மாட்டேன்

உண்மை என்னுடன் தன்னைப்
பகிர்ந்து கொண்டு விட்டது
இனிமேல் நான் என்னை
ஒரு ஆண் என்றோ
பெண் என்றோ
தேவதை என்றோ
அல்லது
ஒரு புனித ஆத்மா என்றோ
ஒருபோதும் சொல்லிக் கொள்ள மாட்டேன்

அன்பானது இந்த ஹஃபீஸை
ஆட்கொண்டு சாம்பலாகி விட்டது
மேலும்
இதுவரை என் அறிவுக்குத் தெரிந்த
எல்லா கோட்பாடுகளிலிருந்தும்
தத்துவங்களிலிருந்தும்
என்னை விடுவித்து விட்டது.