Saturday, January 31, 2009

உலகின் முதல் எழுத்தாளர் பிளாட்டோ




தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் தான் பிளாட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவராவார்.


பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ், அவர் எழுதுவதற்காக ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி "பிளாட்டோ' என வைத்துக் கொண்டார். அனேகமாக புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிய உலகின் முதல் எழுத்தாளர் அவராகத்தான் இருக்கும்.


"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும் இச்சொல்லில் இருந்து தான் ஆங்கிலச் சொல்லான Flat வந்தது. பிளாட்டோவின் சொந்த ஊர் ஏதென்ஸ். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் எளிமையையே விரும்பியவர். இவரின் தந்தை அரிஸ்டோன், தாய் பெரிக்டியோனி. இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் கடைசிப் பிள்ளைதான் பிளாட்டோ.


கிரேகத்தின் வழக்கப்படி இராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது இருபதாவது வயதில் சாக்ரட்டீசிடம் மாணவராகச் சேர்ந்தார் பிளாட்டோ. இவருக்கு தத்துவத்துறையில் மட்டுமல்லாது இசை, கவிதை, ஓவியம் ஆகிய நுண்கலைகளின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருந்தது. சாக்ரட்டீசின் முதன்மை மாணவனாக இருந்த பிளாட்டோ, அவர் இறக்கும் காலம் வரை அவருடனேயே இருந்தார்.


சாக்ரட்டீஸ் இறந்த பிறகு பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணங்கள் அவருக்கு அனுபவ அறிவை சேர்க்கவும், சாக்ரட்டீசின் கருத்துக்களை பரப்பவும் உதவின.கிரேக்கம் திரும்பிய பிளாட்டோ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். உலகின் முதல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வுகளும், பொதுக்கல்வி போதனையும், நுன்கலை பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிளாட்டோ எழுதிய "குடியரசு' என்ற நூல் மிகச் சிறந்தது என போற்றப்படுகிறது.


பிளாட்டோவின் சிந்தனைகள் இன்றளவும் மிகச் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு தனி வாழ்விலும், அரசியலிலும் சம பங்கு தரவேண்டும் திறனை வளர்க்க கல்வி பயன்படவேண்டும். அன்பு, வீரம், பொறுமை, நேர்மை ஆகிய ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று பிளாட்டோ வலியுறுத்தினார்."மனிதனிடம் அறிவு உறங்கும்போது, கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். நல்லறிவு இல்லாததால் தான் தீமைகள் ஏற்படுகின்றன' என்றார் பிளாட்டோ.


நீதி என்பது மனிதப்பண்பு எனச்சொன்ன பிளாட்டோ, புத்தரைப் போலவே - அதிகப்படியான ஆசையே துன்பங்களுக்கு காரணம் - என்றார். வாழும்போதே மக்களின் பேராதரவினையும், மதிப்பையும் பெற்றவர் பிளாட்டோ, அவர் தனது என்பதாவது வயதில் இறந்தபோது ஏதென்சு நகரமே துக்கம் அனுசரித்ததாம். விரிந்த சிந்தனையும் பரந்த உள்ளமும் எப்போதுமே மக்களின் பாராட்டுக்களை பெறும். உலகம் அவர்களைப் போற்றும்.


Written By: கமலப் பிள்ளை Thanks to http://www.keetru.com/

மாபெரும் நாட்டுப்பற்றாளர் திப்பு சுல்தான்!




‘எவன் போரிட அஞ்சுகிறானோ அவன் தன் படை வீரர்களை போரிடுக என்று சொல்லுவதற்கு யோக்கியமற்றவன்’ என்று பேசியவர் திப்பு. ஹைதர் அலிக்கும் ஃபகீருன்னிசாவுக்கும் மகனாக திப்பு நவம்பர் 20, 1750ல் தேவனஹள்ளியில் பிறந்தார்.


தனது 17வது வயதிலேயே மைசூர் போரில் வெள்ளையரை எதிர் கொண்டார். ஹைதர் அலியின் கொள்ளு தாத்தா ஷேக் வாலி முகம்மது காலத்தில் தான் 17ம் நூற்றாண்டில் தில்லியில் இருந்து குல்பர்க்கா நோக்கி குடும்பம் நகர்ந்தது. குடும்பம் அரண்மனை சுற்றிய வேலைகளில் படர்ந்தது. அமைச்சர்களாக குடும்பத்தினர் நுழைந்தனர்.


ஹைதர் முறையான கல்வி இல்லாதவர். ஆனால் திப்புவிற்கு கல்வி வாய்ப்பை மேம்படுத்தினார். ஹைதரின் தளபதி காசிகான் திப்புவிற்கு ராணுவப் பயிற்சி அளித்தார். தந்தையாரின் மரணத்திற்குப் பிறகு திப்பு பெத்தனூர் எனுமிடத்தில் 1783, மே 4ல் எளிய விழாவில் பதவியேற்றார். 400 மைல் நீளமும் 300மைல் அகலமும் கொண்ட ஆட்சிப் பரப்பு. தமிழ்நாட்டில் திண்டுக்கல் வரை வந்திருந்தார்.


போர் என்றால் போர்க்களத்துடன் மட்டுமே இருக்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கக் கூடாது; எதிரியின் குடும்பத்தாரும், குழந்தைகளும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது திப்புவின் கட்டளை. மத சகிப்புத் தன்மை குரானின் அடிப்படை என்று பேசுவார். அனைவரும் ஓர் சமூகமாக மாற வேண்டும் என்பது அல்லாவின் விருப்பமெனில் அது நடைபெறும். அதற்குரிய நற்காரியங்களில் மனம் செலுத்து / செய் என்றவர் திப்பு.


மதவெறியன் திப்பு என்று தீட்டப்பட்ட சொற்சித்திரங்கள் ஆதார வலுவின்றி நொறுங்கி வீழ்கின்றன. இந்துக்கள் தான் அவருடைய தலைமை அமைச்சரும், ராணுவத் தளபதியுமாக இருந்தனர். பல இந்துக் கோவில்களுக்கு ஆண்டு தோறும் திப்புவின் கருவூலத்தில் இருந்து கொடை முறையாகச் செல்லும்.


அவரைப் பற்றிய ஆங்கிலேயரின் வரலாற்றுக் குறிப்புகள் திரித்துக் கூறப்பட்டவை என வரலாற்றாய்வாளர் பி.என்.பாண்டே போன்றோர் நிறுவியுள்ளனர்.திப்பு கூடுதல் மதப்பற்றாளராக இருந்தாலும் தந்தையின் அடியொற்றி மதசகிப்புத் தன்மையை பின்பற்றினார். சிருங்கேரி கோயிலின் தலைமைப் பீடத்திற்கு கன்னட மொழியில் அவர் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்லியல் துறையால் 1916ல் கண்டுபிடிக்கப்பட்டன.


பொதுவாக அரசர்களின் கடிதங்கள் தங்கள் பெயர் மேலே குவிக்கப்பட்ட வடிவத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இக்கடிதங்களில் “சுவாமிஜி” என்று கடிதத் தலைப்பிலும் திப்புவின் பெயர் கடித இறுதியிலும் காணப்படுகிறது.மூன்றாம் மைசூர் போர் காலத்தில் தேசுராம் பாவ் மரத்தா ராணுவம் சிருங்கேரியைக் கொள்ளையடித்தது. சாரதா தேவி சிலையை இடமாற்றியது. இதை அறிந்ததும் திப்பு இருந்த இடத்திலேயே சாரதா தேவி சிலையை நிறுவிட பெத்தனூர் மாவட்ட அதிகாரிக்கு உத்தர விட்டார்.


தனது கடிதத்தில் “சிரித்துக் கொண்டே தீயசெயல் செய்பவர்கள் பின்னொரு காலத்தில் அழுது கொண்டே அதற்காக வருத்தப்படுவார்கள்” என்ற வடமொழிக் கவிதையை சுட்டிக் காட்டி எழுதுகிறார். அக்கோவிலுக்கு இரண்டு பல்லக்குகள் திப்வுவால் பரிசளிக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களுக்கு திப்பு கொடுத்த மரியாதையை இக்கடிதங்கள் மூலம் நாம் உணர முடிகிறது.


நஞ்சன் கூடு லட்சுமி காந்த கோவிலுக்கும், மேல்கோட்டின் நாராயணசாமி கோவிலுக்கும் யானை, நகை உட்பட ஏராளமான பொருள்களை வழங்கியுள்ளார். கோவில் மணிஓசைக்கும் மசூதியின் தொழுகை அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார். மசூதி அருகே அமைந்திருந்த நரசிம்ம கோயில், கங்காதரேசுவரர் கோயில் இரண்டிலும் தினசரி வழிபாடு எவ்வித இடையூறுமின்றி திப்பு ஆட்சிக் காலத்தில் நடந்தது.


சில இந்துக் கோயில்களில் ஏற்பட்ட உள்சச்சரவுகளைக் கூட திப்பு தலையிட்டு தீர்த்து அமைதிப்படுத்தியதாக அறிய முடிகிறது. அவரது அரசாங்க உயர் பதவிகளில் ஏராள இந்துக்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். நிதி மற்றும் வருவாய் - பூர்ணய்யா, காசாளர் - கிருஷ்ண ராவ், சட்டம்ஒழுங்கு - சம அய்யங்கார், வெளி நாட்டுத் தூதரக அலுவல் சீனுவச ராவ், அப்பாஜி ராவ் என்று பட்டியல் நீள்கிறது.


சாதி மதத்திற்கு அப்பாற் பட்டு பொருத்தமானவரைத் தேர்வு செய்தல் என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார்.“இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு திப்பு அடையாளமாகத் திகழ்கிறார். தனது சொந்த மக்களின் ஆதரவைப் பெறாத எவராலும் பலம் வாய்ந்த அய்ரோப்பிய சக்தியை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்தியிருக்க முடியாது.


திப்பு இராணுவத்தினர் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார். இஸ்லாமின் அற்புதமான சூபி இயக்கத்தின் ஆர்வலர். இந்துக்களை மதிக்கத் தெரிந்தவர். இந்து சோதிடர்களிடம் கலந்து பேசத் தயங்காதவர்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில் ஜன 1930ல் பெருமிதம் பொங்க காந்தி எழுதுகிறார்.பிரெஞ்சு நாட்டுடன் உறவை பலப்படுத்திக் கொண்டார்.


புரட்சிகரமான எண்ணத்திற்கு இடமளிக்கும் ‘ஜாக்கோபின் கிளப்’ என்பதை திப்பு தொடங்கினார். அதில் இருந்து 59 உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ எண்ணங்கள் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரெஞ்சுக் குடியரசின் 5ம் ஆண்டு நினைவை ஒட்டி 1797ல் இக்கிளையை துவக்கினார். அம்மன்றத்தில் ஜனநாயகக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டமியற்றும் முறைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.


சுதந்திரத்துக்கான விடுதலை மரக் கன்று ஒன்றையும் அவர் நட்டார். தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட “சிட்டிசன் திப்பு” என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.ஆங்கிலேயர் வரவு ஆபத்தின் அறிகுறி. ஆங்கிலேயரிடமிருந்து தங்களது அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை காலத்தே உணர்ந்தவர் திப்பு. அண்டை நாட்டு அரசுகளை ஆங்கிலேயே எதிர்ப்புக்காகத் திரட்டியவர்.


பிரெஞ்சு, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொண்டவர். கான்ஸ்டான்டி நோபிள், பாரீஸில் தூதரகங்களை நிறுவியவர். மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். உலக நாடுகளில் மைசூரை அறியச் செய்தவர். 17 வயதிலேயே அன்றைய மதராஸில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிகளைக் கலக்கியவர்.


மீர் காசிம் போன்றவர்களைத் தோற்கடித்த பக்சார் வீரன் என்று புகழ் பெற்ற மன்றோவை காஞ்சிபுரத்தில் ஓட ஓட விரட்டியவர் திப்பு. பின்நாட்களில் நெப்போலியனை வென்ற ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்க முடியாமல் போனது வரலாறு.மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து திட்டமிட்டவர்.


நாணய அச்சடிப்பு, நாள்காட்டி அளவையியல், நிதி மற்றும் வங்கி வர்த்தகம், விவசாயம், தொழில், ஒழுக்க நெறிகள் என்ற பன்முக சிந்தனை செயல்பாடு கொண்டவர். அரசு எந்திர முறையில் மேற்கத்திய வடிவங்களை புகுத்திய முதல் ஆட்சியாளர் என மதிப்பிடப்படுகிறார்.முதன் முதலாக வங்கி நிர்வாக முறையை வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர் திப்பு. கூட்டுறவு வங்கி சிறு சேமிப்பு முறையை ஊக்குவித்தவர்.


தொழில் வர்த்தகம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தவர். பட்டு, சந்தனம், மிளகு, ஏலம், தேங்காய், தங்கம், யானை, தந்தம் ஆகிய அனைத்து வியாபாராங்களிலும் மைசூர் புகழ் பெற்று விளங்கியது. மேற்கு நாடுகளில் இதற்கானச் சந்தையை ஒழுங்கமைத்தவர் அவர். அந்நிய நாட்டினர் எவர் கையிலும் மேற்கூறிய வர்த்தகம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். ஏற்றுமதி, இறக்குமதி அரசாங்கக் கட்டுப்பாட்டில் நடந்தது.


ராணுவத் தளவாடங்களுக்கு மட்டுமல்லாமல் துணி, காகிதம், கண்ணாடி, சர்க்கரை போன்ற பலவற்றிற்குமான தொழிற்கூடங்களை அமைத்தார். கப்பல் கட்டுமான தொழிலை சிறப்பாக்கிட வேண்டும் என்ற கனவை வைத்திருந்தார். 100 கப்பல் கட்டுவதற்கான ஆணையை 1793ல் வெளியிட்டிருந்தார். சீரங்கப் பட்டினத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலையை நிறுவினார்.


தாரமண்டல் என அதற்குப் பெயரிட்டார். பெங்களுர், சித்ரதுர்கா, பெத்தனூர், சீரங்கப்பட்டினம் ஆகிய நான்கு இடங்களில் கிளைகளை நிறுவினார். பதூல் முஜாஹிதீன் எனும் இராணுவ பத்திரிகையில் ராக்கெட் குறித்து திப்பு எழுதியிருப்பதாக நாம் அறிகிறோம். ‘தாரமண்டல்’ என்று பெயரிட்டு அப்பகுதியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டதாகவும் திப்புவின் வீழ்ச்சியின் போது 9000 எண்ணிக்கையில் ராக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது.


அப்துல் கலாம் ‘இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம்’ குறித்து 1991ல் ஆற்றிய உரையில் திப்புவின் தொழில்நுட்பம் குறித்து வியந்து பேசினார்.பல நாடுகளிலிருந்து விதை மற்றும் தாவர வகைகளைக் கொணரச் செய்தார். உழுபவர்க்கு தரிசு நிலங்களை தந்து விவசாயத்தை மேம்படுத்தினார். அதோடு அந்த நிலங்களை வாரிசுதாரருக்கு உரியதாக்கிடவும், யாரும் அவர்களிடமிருந்து அபகரிக்க முடியாதென்பதையும் சட்டமாக்கினார். ஜாகீர் வரியை நீக்கினார். விவசாயத்திற்குக் கடனுதவி கொண்டு வந்தார். கட்டாய உழைப்பைத் தடை செய்தார்.


அவசியமற்ற வழக்குகளில் கால விரயம் ஏற்பட்டு விடாமல் தடுத்திட கிராமத் தகராறு தீர்ப்பாயங்களை ஊக்குவித்தார். தண்டனை முறைகளைக் கூட மாற்றினார். அபராதம், கசையடி போன்றவற்றை மாற்றி மரங்களை நடவேண்டும், குறிப்பிட்ட தாவர வகைகளை நட்டு இவ்வளவு காலம் பராமரிக்க வேண்டும்; இந்த அளவுக்கு வளர்க்க வேண்டும் என்றெல்லாம் தண்டனை முறைகளை உருவாக்கினார்.


தனது மகன் ஃபதே ஹைதர் அனுமதியின்றி வேறொருவர் தோட்டத்தில் காய் பறித்ததற்கு தண்டனை வழங்கினார். கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் கீழ்க்கண்ட வார்த்தைகளை பொறிக்கச் செய்தார். “அரசாங்கம் இந்த அணையைக் கட்டி வருகிறது. பயிர், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கான பாசன வசதியை எவரும் பெறலாம்”.சீரங்கப்பட்டினத்தில் ஜாமி அல் உமர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் நிறுவ பெரு விருப்பம் கொண்டார்.


ஃபாஜி அக்பர் என்ற பெயரில் செய்தி பத்திரிகை தொடங்கினார். அதில் எழுதினார். பெர்ஷியன், அரபி, உருது போன்ற மொழிகளுடன் கன்னடமும் மராத்தியும் அறிந்திருந்தார். ஐரோப்பிய மொழிகளில் பிரெஞ்சு, ஆங்கிலம் கற்றறிந்தார். தனது ஆட்சிக் காலத்தில் 45 புத்தகங்களை வெளியிட வைத்தார். அவருடைய நூலகத்தில் ஒளரங்சீப்பின் கையெழுத்துப் பிரதியான குரான் இருந்தது.


இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. சூபி துறவிகளின் மாபெரும் ஆல்பம் ஒன்றை தொகுத்து வைத்திருந்தார்.புகையிலைப் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் திப்பு. திருமணக் கொண்டாட்டங்களில் ஆடம்பர செலவினங்களுக்கு கட்டுப்பாடு விதித்தார். ஆதரவற்ற பெண்களையோ, குழந்தைகளையோ விற்பதை தடைசெய்தார் என்ற செய்தி ஆறுதல் தரும் வேளையில் அப்படிப்பட்ட நடைமுறை வழக்கத்தில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.


மதுவிலக்கை அமுல்படுத்தியவர் திப்பு. “மது விலக்கை மதரீதியாகப் பார்க்க வேண்டியதில்லை. பொருளாதாரம் சார்ந்த ஒன்று. துவக்கத்தில் நமது கருவூலம் பாதிக்கப்படலாம். ஆனால் நமது மக்களின் நன்னெறி உயரும். நன்னடத்தை மிகுந்த எதிர்கால இளைஞர்களை உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு. நமது கருவூலக் கவலையை விட நமது மக்களின் நன்னெறி மற்றும் ஆரோக்கியம் உயர்ந்ததல்லவா?” என்று மீர்சாதிக் என்பவருக்கு 1787ல் தந்த குறிப்பில் நாம் காண முடிகிறது.


மனித குலம் கண்ணீருடனும் செந்நீருடனும் எழுப்பக் கூடிய மாட மாளிகைகளும் பெரும் அணைக்கட்டுகளும் நமது சாதனைகளாக முடியாது, புகழையும் சேர்க்காது என்றார். “நாம் வாழ்வதற்கும் சாவதற்கும் மாபெரும் நோக்கம் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஆன்மா விவசாயத்தில் இருக்கிறது. நமது வளமான நிலத்தில் நாம் தரும் உழைப்பிற்கு பலன் உறுதி.


பஞ்சமும் தேவையும் அறியாமையாலோ சோம்பேறித் தனத்தாலோ அல்லது லஞ்ச லாவண்யத்தாலோ வருகிறது” என்று 1788ல் சுற்றறிக்கை ஒன்றை தனது அதிகாரிகளுக்கு திப்பு அனுப்பினார்.ஆங்கிலேயரிடம் இருந்து தனது அரசியல் விடுதலைக்காக, சுதந்திரத்தைக் காப்பதற்காக உறுதியாகப் போராடியவர். உயிர் நீத்தவர்.


நூறாண்டு குள்ளநரியாக வாழ்வதை விட ஒருநாள் சிங்கநிகர் வாழ்க்கை போதும் என்றார். உலகளாவிய திப்புவின் முயற்சிகளை முறியடிப்பதில் பிரிட்டன் முக்கிய பங்காற்றியது. ஆங்கிலேயர்கள் தனியாக திப்புவோடு போராடி வெல்ல முடியவில்லை. மராட்டிய மராத்தாக்களுடனும் அய்தராபாத் நிசாமுடனும் உடன்பாடு கொண்டனர்.


அவர்களின் உதவியுடன் மைசூர் சீரங்கப்பட்டினத்தில் திப்புவைத் தோற்கடித்தனர். 1792 மார்ச் 22ல் திப்பு ஆங்கிலேயருக்கு உடன்பட்டு கையெழுத்திட நேர்ந்தது. தனது ராஜ்யத்தில் பாதியை இழந்தார். இருமகன்களை பிணை வைக்க நேர்ந்தது. கருணையில்லாமல் கார்ன் வாலீஸ் அவரது மகன்களை கல்கத்தாவிற்குக் கொண்டு சென்றார்.திப்பு மைசூர் போர்கள் நான்கிலும் பங்கேற்றவர்.


கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமிருந்த ‘லீடன்ஹால் ஸ்டிரீட்’ திப்பு குறித்த நடுக்கத்திலிருந்தது. முதல் இரண்டு போர்களிலும் ஆங்கிலேய ராணுவம் திப்பு மற்றும் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது. மைசூரில் போர் குதிரைகள் இறக்கை கட்டிப் பறந்தன போன்று போரிட்டதாக அலெக்சாந்தர் போப் என்பவர் பதிவு செய்கிறார்.


செப்.1780களில் 36 ஆங்கில ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட அய்ரோப்பிய வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பிப்.1782ல் கர்னல் பிரைட்வொயிட் என்பவரை தஞ்சாவூருக்கு அருகில் திப்பு தோற்கடித்ததாக அறிகிறோம். 1400 சிப்பாய்களையும் 100 அய்ரோப்பியர்களையும் அவர்களது ஆயுதங்களுடன் கைப்பற்றியதாகத் தெரிகிறது.ஆங்கிலேயரின் தொடர் வற்புறுத்தல்களுக்கு திப்பு உடன்பட மறுத்தார்.


நான்காவது மைசூர் போரில் மே 4, 1799ல் திப்பு வீர மரணம் எய்தினார். சாதாரண படை வீரனைப் போன்றே தனது தாய் நாட்டைக் காப்பதற்காக தெருவிறங்கிப் போராடினார். ஆங்கிலேய ராணுவத்தினன் ஒருவன் அவரது உடைவாளைப் பறிக்க முயன்ற போது திப்பு அவனை தன் வாளால் வீழ்த்தினார் என்று அறிகிறோம்.


புகழ் வாய்ந்த அவ்வாள் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. 1988ல் தான் இந்தியா அவ்வாளை மீண்டும் பெற்றது. அவரது வாரிசுகள் திப்புவின் ஆட்சியை மீண்டும் கொணர்வோம் என்ற முழக்கத்தில் 1806 வேலூர் எழுச்சியில் முன் நின்றார்.எளிய வாழ்க்கை முறையை விரும்பிய திப்பு பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய உணவு வகைகளையே எடுத்துக் கொள்வார்.


கடிதங்களைத் தானே எழுதும் பழக்கம் உடையவர். மாபெரும் நாட்டுப்பற்றாளராக, குடிமக்களின் மேன்மை குறித்த சிந்தனையாளராக, படிப்பறிவு மிக்கவராக, போராடும் வீரனாக என்று பல்வேறு சிறப்புகளுடன் வாழ்ந்தவர் திப்பு.

உப்பு... சில உண்மைகள்!!! ???


சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சர்க்கரை என்பதே வெள்ளை நஞ்சாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், மற்றொரு வெள்ளை அபாயம் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அது - உப்பு!


எவ்வளவு ருசியாக சமைத் தாலும் உப்பில்லாவிட்டல் அதை வாயில் வைக்க முடி யாது என்பது உண்மைதான் அதே நேரம், உப்பு அளவுக்கு அதிகாமாகும்போதும் பல உபத்திரவங்களை அளித்து விடும்.


உங்கள் உடம்பில் உப்பு அதிகரித்தால், அதிகமான தண்ணீரை உடம்பு சேர்த்து வைத்துக்கொள்ள ஆரம்பிக் கும். அப்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகப் பிரச் சினைகள், சிறுநீரகக் கற்கள், ஏன் பக்கவாதப் பாதிப்புகூட ஏற்படும்.
அதிகமான உப்பு, ரத்தக் குழாய்களில் படிந்து, சீரான ரத்த ஓட்டத்துக்குத் தடையை ஏற்படுத்துவதே முக்கியக் காரணம். இந்த அடைப்பு நீடிக்கும்போது இதய நோய்கள் மாரடைப்பு போன்ற ஆபத்துகள் அடுத்து வரும்.


32 நாடுகளில் 10 ஆயிரம் பேர் அன்றாடம் உணவின் மூலம் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் 6 கிராம் உப்பு அதிகமாக எடுத்துக் கொண்டாலும் அது உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்து வதைக் கண்டுபிடித்தனர். அது இதய நோய்களின் அடித்தள மாகவும் ஆகிறது என்பதை அறிந்தனர்.


பரம்பரை ரீதியாக இதயநோய் பிரச்சினைகள் இல்லாவிட்டாலும் அன்றாட உப்பு அளவில் கவனம் வைப் பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உணவில் அதிகமாக உப்புப் போட்டுக் கொள்ளும் வழக்கம் எனக்கில்லையே என்று நீங்கள் கூறலாம். ஆனால், நீங்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் உப்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டி ருக்கிறது.


உங்களுக்கு அடிக் கடி குடும்பத்துடன் துரித உணவகங்களில் சாப்பிடும் வழக்கம் இருந்தால் அதன் மூலம் கூடுதல் உப்பு உங் களுக்குச் செல்கிறது. உடனடி உணவுகளிலும், பேக்கிங் செய் யப்பட்டுவரும் உணவுகளிலும் அவற்றைக் கெடாது பாது காக்கும் பிரிசர்வேட்டிவ் ஆக உப்பு பயன்படுத்தப்படுகிறது.


பாக்கெட் பாப்கார்ன், ஊறு காய், சாஸ், பதப்படுத்தப் பட்ட உணவுகளிலும் உப்பு அதிகம். கடைகளில் கிடைக் கும் பாலாடைக் கட்டி, வெண்ணெய் போன்றவற்றில் கூட உப்பு இருக்கிறது. இப் படி பெரும்பாலான உணவுப் பொருட்களில் உப்பு சேர்க்கப்படுவற்குக் காரணம், அது எளிதாகவும், மலிவாக வும் கிடைக்கும் பாதுகாப்புப் பொருள் என்பதுதான்.


சரி, உப்பினால் ஏற்படும் உபத்திரவங்களைத் தவிர்ப்பது எப்படி?


உடம்பிலிருந்து நச்சுக் கழிவுகளை எல்லாம் வெளி யேற்றும் வகையில் நிறைய தண்ணீர் குடியுங்கள்.


காரசாரமான நொறுக்குத் தீனிகள், ஊறுகாய் போன்ற வற்றைத் தவிர்த்து, வீட்டு உணவை விரும்புங்கள். நிறைய காய்கள், பழங்கள் சாப் பிடுங்கள். உடம்புக்குத் தேவை யான நீர்ச்சத்தை அவை அளிக்கும்.


உடம்பில் தண்ணீர் தேக் கம் ஏற்படுவதால் நச்சுகளின் அதிகரிப்பை நீராவிக் குளியல் போன்றவை மூலம் போக்க லாம். பேக்கிங் உணவுகளில் உப்பு சேர்க்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.. சோடியம் குளோரைடு என்று குறிப்பிட்டிருப்பதால் நாம் அதைக் கவனிக்காமல் போகலாம்.


உப்பைக் குறைத்து சுவையை குறைக்காமல் சமைக்கும் முயற்சிகளில் ஈடு படுங்கள். அதற்கேற்ப நறு மணப் பொருட்கள் போன்றவற்றைச் சேருங்கள்.
Thanks to Mr. Thambidhurai. Ansari, Doha - Qatar

சவூதி அரசருக்கு இரான் அதிபரின் கடிதம்!



சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு, 22 நாட்களாக கஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்திய ஆக்ரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைபாடு எடுக்க வேண்டும் எனக் கோரி இரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத், கஸ்ஸா படுகொலை உச்ச கட்டத்தை அடைந்து கொண்டிருந்தபோது சவூதி அரசருக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் முக்கியப் பகுதிகள்:

அளவற்றக் கருணையாளனான அல்லாஹ்வின் பெயரால்...!

சவூதி அரசரான அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல்-சவூத் அவர்களுக்கு,

அல்லாஹ்வின் கருணையும் அருளும் உங்கள் மீது எப்பொழுதும் பொழியட்டும் எனப் பிரார்த்திக்கின்றேன்.

நிரபராதிகளும் உதவி செய்ய எவருமில்லாதவர்களுமான கஸ்ஸாவிலுள்ள அப்பாவி மக்களுக்கு எதிராக, நாகரீமற்றவர்களான சியோனிச அரசு அக்கிரமும் அராஜகமுமான ஆக்ரமிப்பைத் துவங்கி இன்றோடு 19 நாள்கள் கடந்து விட்டன என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

தரை, கடல், ஆகாய வழியிலான அனைத்து வழிகளும் இறுக்கப் பூட்டப் பட்டு, எல்லா வழிகளும் அடைக்கப் பட்ட நிலையில் கடுமையான வெடிகுண்டுத் தாக்குதலையும் கஸ்ஸா மக்கள் எதிர்கொள்கின்றனர்.

பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் உட்பட சாதாரண அப்பாவி மக்கள் தங்களின் சொந்த மண்ணில் வைத்து கருவறுக்கப் படுகின்றனர். கஸ்ஸாவில் நடக்கும் நிகழ்வைக் கண்ணுறும் எவரது இதயமும் வெடிக்கும்; மனதில் தீப்பிடிக்கும்.

ஜனநாயகத்தின், மனித உரிமைகளின் பிறப்பிடம் எனத் தன்னைத் தானே உரிமை கொண்டாடும் வன்சக்திகள், சியோனிஸ அரசுக்கு ஆயுத சப்ளை செய்து ஆக்ரமிப்பும் இன அழிப்பும் செய்வதற்காக மட்டுமே இத்தகைய நரமாமிசம் உண்ணும் அரசை இங்கு உருவாக்கினர். இஸ்ரேலின் செயல்களுக்குக் கண்ணை மூடி ஆதரவு நல்குவதோடு, குற்றங்கள் செய்வதற்குத் தேவையான அவகாசத்தை அவர்களுக்குக் கொடுக்க ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளை விலைக்கு வாங்கவும் செய்கின்றன.

வன்சக்திகளின் செயல்பாடுகளிலும் அவர்களின் செய்திகளிலும் நமக்கு எவ்வித ஆச்சரியமும் இல்லை. ஆனால், முன்பு எப்பொழுதும் இதுவரை நடந்திராத அளவிற்கான இந்த இன அழிப்பை, கண்டும் காணாதது போன்று நடிக்கும் இஸ்லாமிய-அரபு அரசுகளின் நடவடிக்கைகள் ஆச்சரியம் அளிக்கக் கூடியவை! வருத்தமளிக்கக் கூடியவை!.

எதிர்த்து நிற்பதற்கு எதுவுமே இல்லாத ஒரு சமூகம், எங்கிருந்தாவது ஓர் அனாயாசமான எதிர்ப்பு வருமா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆக்ரமிப்பாளர்களின் மிருகச் செயல்பாடுகளின் முன்பு தலை கவிழ்ந்திருக்கும் நம்மை இறைவன் மன்னிக்கட்டும்.

சியோனிஸ அரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது நாமனைவரும் தெரிந்த ஒன்றாகும். நிராசையின் காரணத்தினாலேயே அவர்கள் இப்பொழுது அராஜகம் புரிகின்றனர். சுதந்திரமாகச் சிந்திக்கும்-பேசும் அனைத்து மக்களும் நாடுகளும் சியோனிஸ அரசின் அக்கிரமங்களுக்கு எதிராகக் குரல் உயர்த்தி விட்டனர்.

சவூதி அரசரும் புண்ணிய பூமிகளான மக்கா-மதீனாவின் பாதுகாவலரான தாங்கள், இக்கொடுமையான நிகழ்வில் காண்டும் மௌனத்தைக் கலைப்பீர்கள் எனவும் இஸ்லாமிய சமூகத்தின் அன்புக்குப் பாத்திரமான குழந்தைகளைக் கொன்றொழிக்கும் சியோனிஸ கொடூரத்திற்கு எதிராகக் கடுமையான நிலைபாட்டை எடுப்பீர்கள் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

இதன் மூலம் முஸ்லிம் உலகத்தில் பிரிவினை விதைகளைத் தூவலாம் என ஆசை கொள்ளும் வன்சக்திகளின் எதிர்பார்ப்பைத் தகர்க்கத் தங்களின் உறுதியான நிலைபாட்டினால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
சுதந்திர வேட்கையுள்ள கஸ்ஸாவிலுள்ள வீரப் போராளிகளின் தீரமான போராட்டத்திற்கு வெற்றியளிக்க நான் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
சியோனிஸ அரசு போன்ற கொடுமையாளர்களை அவன் அழிப்பான் எனவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

அன்புடன்,
மஹ்மூத் அஹ்மதி நஜாத்.

முத்துக்குமாரின் மரண வாக்குமூலம்!



இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னையில் இன்று தீக்குளித்து மரணமடைந்த நம் அருமைச் சகோதரன் முத்துக்குமாரின் மரண வாக்குமூலம் இது.


தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கையே அவரது மரண வாக்குமூலமாய்…
விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க நேர்ந்ததற்கு நான் வருந்துகிறேன். ஆனால் வேறு வழியில்லை. என் பெயர் முத்துக்குமார். பத்திரிகையாளர் மற்றும் உதவி இயக்குநர். தற்சமயம் சென்னையில் உள்ள பத்திரிகை ஒன்றில் வேலை செய்து வருகிறேன். உங்களைப்போல் தான் நானும்.


தினமும் செய்தித்தாளையும், இணையத்தையும் பார்த்து பார்த்து, தினம் தினம் கொல்லப்பட்டு வரும் எம் சக தமிழர்களைக் கண்டு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், யோசிக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ பேரில் ஒரு சாமானியன்.


வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்த பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது இந்திய ஏகாதிபத்தியம். இந்தியாவின் போர் ஞாயமானதென்றால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே.. ஏன் திருட்டுத்தனமாக செய்ய வேண்டும்?


ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம். ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?


ஜாலியன் வாலாபாக்கில் வெள்ளையன் கொன்றான் என்றார்களே, இவர்கள் முல்லைத் தீவிலும் வன்னியிலும் செய்வதென்ன? அங்கு கொல்லப்படும் குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் குழந்தைகள் நினைவு வரவில்லையா? கற்பழிக்கப்படும் பெண்களைப் பாருங்கள். உங்களுக்கு அதுபோன்ற வயதில் ஒரு தங்கையோ, அக்காவோ இல்லையா?


ராஜீவ் கொல்லப்பட்டபோது காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஏன் அவருடன் இல்லை, கூட்டணிக் கட்சித் தலைவியான ஜெயலலிதா, தமிழ்நாட்டில் ராஜீவ் கலந்துகொள்ளும் ஆகப்பெரிய பொதுக்கூட்டத்தில் ஏன் பங்கெடுக்கபோகவில்லை என்பதுபோன்ற கேள்விகள் கேட்கப்படாமலும், இவர்களால் பதில் சொல்லப்படாமலும் கிடக்கின்றன. மக்களே யோசியுங்கள். இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?


கலைஞரா? நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அப்பொழுதும் அவர் அறிவிப்பார். பிறகு, மத்திய அரசைப் புரிந்துகொள்வார்(?!). பிறகு மறுபடி சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவார் - இந்த மாசம், இந்த வாரம், இதுவரைக்கும் என்ன எவனும் தொட்டதில்ல என்கிற வின்னர் பட வடிவேல் காமெடியைப் போல.
காகிதம் எதையும் சாதிக்காது மக்களே!


இப்பொழுது, உலகத் தமிழினத் தலைவர் என்ற பட்டப்பெயரைச் சூடிக்கொள்ளவும், தமிழ்நாட்டில் இருக்கும் பணத்தையெல்லாம் தன் குடும்பத்திற்கே உரித்தாக்கவும் விரும்புகிற தேர்தல் காலத் தமிழர் கலைஞர் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள பயந்து மருத்துவமனையில் போய் ஒளிந்துகொண்டுள்ளார்.


தனது மந்திரிகளுக்கு அவசியப்பட்ட துறைகளுக்காக சண்டப்பிரசண்டம் செய்து சதிராடிய இந்த சூரப்புலி உண்மையில் தமிழுக்காகவோ, தமிழருக்காகவோ செய்ததென்ன? ஒருமுறை அவரே சொன்னார், ‘தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலா இருப்பா’னென்று. இவருடைய பம்மலாட்டத்தையெல்லாம் பார்த்தால் ரொம்பவே நக்கியிருப்பார் போலிருக்கிறேதே…


பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். ஈழத் தமிழர் பிரச்னை என்றில்லை, காவிரியில் தண்ணீர் விடச்சொல்லும் போராட்டமென்றாலும் சரி, தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான்.


இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம். உலகம் முழுக்க மக்களுக்கான புரட்சிகரப் போராட்டங்களில் முன்கையெடுப்பவர்களாக இருந்தது மாணவர்கள் என்கிற ஜாதிதான். அதேபோல், தமிழ்நாட்டிலும் உங்களுக்கு முந்திய தலைமுறையொன்று இதுபோன்ற ஒரு சூழலில், இதுபோல் குடியரசு தினத்திற்கு முன்பு களம் கண்டுதான் காங்கிரஸ் உள்ளிட்ட தேசியக் கட்சிகளைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடித்தது.


ஆக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணம் உங்கள் கைகளுக்கு மறுபடியும் வந்து சேர்ந்திருக்கிறது. பொதுவாக உலக சரித்திரத்தில் இப்படியெல்லாம் நடப்பதில்லை. கடந்த முறை நடந்ததுபோல், உங்கள் போராட்டத்தின் பலன்களை சுயநலமிகள் திருடிக்கொள்ள விட்டுவிடாதீர்கள். போராட்டத்தின் பலன்களை அபகரித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. முதலில் செய்த விசயம் மாணவர்கள் அரசியல் ஈடுபாடு கொள்ளக்கூடாது என சட்டம் போட்டதுதான். ஆட்சிக்கு வந்த அது, தமிழின உணர்வுகளை மழுங்கடித்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் மகஜர் கொடுக்கும் ஜாதியாக மாற்றியது.
அந்த மரபை அடித்து உடையுங்கள். மனு கொடுக்கச் சொல்பவன் எவனாக இருந்தாலும், அவனை நம்பாதீர்கள். நமக்குள்ளிருக்கும் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகளை எரித்துக்கொள்ள இதுதான் தருணம்.


உண்ணாவிரதத்தையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு களம் காணுங்கள். உண்மையில், இலங்கையில் இந்திய ராணுவ நடவடிக்கை என்பது தமிழர்களுக்கெதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியர்களுக்குமே எதிரானது. சிங்களச் சிப்பாய்களிடம் கற்றுக்கொள்கிற பாலியல் நுணுக்கங்களைத்தானே அவர்கள் அசாமில் அப்பாவிப் பெண்களிடம் பரிசோதித்துப் பார்த்தார்கள்!


விடுதலைப்புலிகளை ஒடுக்குவதற்கான சிங்கள வன்முறை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு வடகிழக்கு மாநிலப் போராளிகளிடம் பயன்படுத்திக் கூர் பார்த்தார்கள்! போதாதற்கு, ஹைட்டியில் சமாதானப் பணிக்காக அனுப்பப்பட்ட ஐ.நா.வின் ராணுவத்திலிருந்து இந்திய மற்றும் இலங்கை ராணுவம் அவரவர்களுடைய பாலியல் நடவடிக்கைகளுக்காக அடித்துத் துரத்தப்பட்டிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது - இந்தக் கூட்டணி கொள்கைக் கூட்டணியல்ல, பாலியல் கூட்டணி என்றல்லவா!,


ஆக இந்திய - இலங்கை இராணுவக் கூட்டு என்பது இந்தியர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கும் கூட எதிரானதாக இருப்பதால், அகில இந்திய அளவில் மாணவர்கள், ஜனநாயக அமைப்புகளையும் உங்கள் பின்னால் திரட்டுங்கள்.


இதையெல்லாம் மக்களே செய்ய முடியும். ஆனால், அவர்கள் சரியான தலைமை இல்லாமல் இருக்கிறார்கள். உங்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்குகள். உங்கள் போராட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கல் என்ற இடத்திலிருந்து அனைத்து மாணவர்கள் என்று மாற்றுங்கள்.


உங்களிடமிருக்கும் வேகமும், மக்களிடமிருக்கும் கோபமும் இணைந்து தமிழக வரலாற்றை அடியோடு மாற்றட்டும். ஆன்பலம், பணபலம், அதிகார வெற்றியை உடைத்து எறியுங்கள். உங்களால் மட்டுமே இது முடியும்.
‘நாங்கள் தமிழ் மாணவர்கள், தமிழ்நாட்டின் உயிரானவர்கள், இங்கு தமிழினம் அமைதிகொண்டிருந்தால் ஏடுகள் தூக்கி படிப்போம். எங்கள் தமிழர்க்கின்னல் விளைந்தால் எரிமலையாகி வெடிப்போம்‘ என்ற காசி அனந்தனின் பாடலை ஓர் அறிவாயுதமாக ஏந்துங்கள்.. என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள்.


என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள். எனக்கு சிகிச்சையோ, போஸ்ட்மார்டமோ செய்யப்போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மாணவர்களே.. உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.


காரணம், அகில இந்திய அளவில், மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உயர்சாதி மாணவர்கள் போராடிக்கொண்டிருக்க, தன்னந்தனியாக நின்று, மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகப் போராடியர்களல்லவா நீங்கள்? எனக்கு செய்வதெல்லாம் இருக்கட்டும். நம் சகோதரர்களான ஈழத்தமிழர்களுக்கு உங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?


தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.


இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?



தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதரர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும், பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடுதான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும். நாங்கள் இன்று பெரும் இக்கட்டை எதிர்நோக்கியிருக்கிறோம்.
ஈழத்திலிருந்துக்கும் எங்கள் சகோதரர்கள் இந்தியர் என்னும் நம் பெயரைப் பயன்படுத்திதான் நம் அரசால் கொலை செய்யப்படுகிறார்கள்.


இந்தப் போராட்டத்தில் நாங்கள் தனித்துவிடப்படுவதை இந்திய அரசு விரும்புகிறது. அப்படி ஆக்கக்கூடாதென நாங்கள் விரும்புகிறோம். ஆகவே, போராடிக்கொண்டிருக்கும் எங்கள் சகோதரர்களுக்கு உங்கள் ஆதரவும் உள்ளதென மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துங்கள். அரசுகளில் அங்கம் வகிக்கக்கூடிய உங்கள் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்களை எம் கரத்தை பலப்படுத்துவதோடு, எதிர்காலத்தில், ஒரு நவநிர்மாண் சேனாவோ, ஸ்ரீராம் சேனாவோ தமிழ்நாட்டில் உருவாகவிருக்கும் ஆபத்தைத் தவிர்க்கும் என்பது என் கருத்து.


தமிழ்நாடு காவல்துறையிலிருக்கும் இளைஞர்களே…
உங்கள் மீது எனக்கு இருக்கும் மதிப்பு கொஞ்சம் நஞ்சமல்ல, காரணம், தமிழுக்காக மற்றவர்கள் என்ன செய்தார்களோ, அலுவலர்களை ஐயா என அழைப்பது போன்ற நடைமுறை ரீதியில் தமிழை வாழ வைத்துக்கொண்டிருப்பவர்கள் நீங்கள்தான். மக்களுக்காகப் பாடுபடவேண்டும், சமூக விரோதிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதுபோன்ற உன்னத நோக்கங்களுக்காகத்தான் நீங்கள் காவல்துறையில் இணைந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


ஆனால், அதை செய்ய விடுகிறதா ஆளும் வர்க்கம்? உங்களை சிறுசிறு தவறுகள் செய்ய விடுவதன் மூலம் தன்னுடைய பெருந்தவறுகளை மறைத்துக்கொள்ளும் அதிகார வர்க்கம், உங்களை, எந்த மக்களுக்காகப் பாடுபட நீங்கள் விரும்பினீர்களோ, எந்த மக்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தீர்மானித்தீர்களோ, அந்த மக்களுக்கெதிராகவே, பயிற்றுவிக்கப்பட்ட அடியாள்களாக மாற்றுகிறது.


டெல்லி திகார் ஜெயிலைப் பாதுகாப்பது தமிழக போலீஸ்தான். இந்தியாவில் பழமையான காவல்துறையான தமிழக காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறைகளில் ஒன்று. ஆனால் அந்த மதிப்பை உங்களுக்குக் கொடுக்கிறதா இந்திய அரசாங்கம்! மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தமிழகம் வந்து திரும்பிப்போகையில், சென்னை விமான நிலையத்தில், அவருக்கான பாதுகாப்பை வழங்க அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் மத்திய காவல் அதிகாரிகள்.


ஏனென்று கேட்டதற்கு, ராஜீவ் காந்தியை நீங்கள் பாதுகாத்த லட்சணம் தான் தெரியுமே என்று கிண்டல் செய்திருக்கிறார்கள். ராஜீவ்காந்தியைத் தமிழக காவல்துறையால் காப்பாற்ற முடியவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, ராஜீவோடு இறந்தவர்களில் பலர் அப்பாவி போலீஸ்காரர்கள் என்பது. உங்கள் அர்ப்பணிப்புணர்வு கேள்விக்காப்பாற்பட்டது.


ஆனால் மேற்படி வெண்ணெய் வெட்டி வீரரர்கள் - அதுதான், இந்திய உளவுத்துறை - ராஜீவின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்ற தகவலை அறிந்தபோதும் மெத்தனமாக இருந்தது என்பது பின்னர் அம்பலமானதல்லவா… இதுவரை காலமும் நீங்கள் அப்பாவி மக்களுக்கெதிராக இருந்தாலும் தமிழகத்தின் பெருமைகளில் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தஇந்த தருணத்தில், நீங்கள் மக்கள் பக்கம் இருந்தால் மட்டுமே மக்களிடம் இழந்திருக்கிற பெருமையை மீட்டெடுக்க முடியும்.


ஒருமுறை சக தமிழர்களுக்காக அர்ப்பணித்துப்பாருங்கள். மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாங்குவார்கள். தமிழனின் நன்றி உணர்ச்சி அளவிடற்கரியது. தன்னுடைய சொந்தக்காசை வைத்து அணை கட்டிக்கொடுத்தான் என்பதற்காகவே அவனுக்கு கோயில் கட்டி. தன் பிள்ளைகளுக்கு அவன் பெயரை வத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறான் முல்லையாற்றின் மதுரை மாவட்டத்தமிழன்.


நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கொந்தளிக்கப் போகும் தமிழகத்தில், மத்திய அரசு அதிகரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது, ரா, சி.பி.ஐ போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்களை உள்ளூர் மக்களுக்கு அடையாளம் காட்டுவதும்தான். இதை மட்டுமாவது செய்யுங்கள். மற்றதை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.


களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதைலைப் புலிகளே…
அனைத்துக்கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான்.



தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள். 1965ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரை சில சுயநலமிகளின் கையில் ஒப்படைத்ததால்தான் தமிழக வரலாறு கற்காலத்திற்கு இழுபட்டுள்ளது. அந்தத் தவறை நீங்கள் செய்து விடாதீர்கள்.



அன்பிற்குரிய சர்வதேச சமூகமே, நம்பிக்கைக்குரிய ஒபாமாவே,
உங்கள் மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இறையான்மை கொண்ட ஒரு குடியரசு தம் குடிமகனை இனஒதுக்கல் மூலமாக கொடுமைப்படுத்தாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. வசதிக்காக அமெரிக்காவின் கடந்த காலத்தையே எடுத்துக்காட்டாக சொல்லலாம்.


உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை மாவீரன் முகமதலி சொன்னானே, என் சருமத்திலிருக்கும் கொஞ்ச வெண்மையும் கற்பழிப்பின் மூலமாகவே வந்திருக்குமென்று… நீங்கள் அமைதியாக இருக்கும் வரை இந்தியா வாயே திறக்காது. ஒட்டுமொத்த தமிழர்களும் அழிக்கப்பட்ட பிறகு வேண்டுமானால் அது நடக்கும். அதுவரை, இந்தியாவின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்கப் போகிறீர்களா?



வன்னியில், விடுதலைப்புலிகளூக்கு எதிரான போர்தான் நடக்கிறது என்கிறார்கள். புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்காள் என்கிறார்கள். அப்படியானால் அரசு சொன்ன பகுதிக்கு வந்த மக்களை ஏன் கொலை செய்தார்கள்? இது ஒன்று போதுமே, தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்து நின்றாலும் சரி, இலங்கை அரசைச் சார்ந்து நின்றாலும் சரி, தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே அவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கு. இது இனப்படுகொலை இல்லையா?


இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆயுதம் கொடுத்தும், ஜப்பான் பணம் கொடுத்தும், கூடுதலாக, இந்தியா நாட்டாமை செய்தும் தமிழர்களைக் கொள்கின்றனரென்றால். நீங்கள் உங்கள் மெளனத்தின் மூலமாகவும், பாராமுகத்தின் மூலமாகவும் அதே கொலையைத்தான் செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை ஏன் உணரவில்லை?


ஆயுதம் தாங்கி போராடுவதால் மட்டுமே யாரும் தீவிரவாதியாகிட மாட்டார்கள். அறத்திற்கே அன்பு சார்பென்ப அறியார். மறத்திற்கும் அஃதே துணை என்று பாடியுள்ளான் எங்கள் திருவள்ளூவர்.



புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்கிறார் ஜெயலலிதா - என்னவோ பிரச்சினையே புலிகள் ஆயுதம் அடுத்ததால்தான் வந்தது என்பதைப் போலெ.. உணமையில், புலிகள் தமிழீழ இன அழிப்பிலிருந்து உருவாகி வந்தவர்களே தவிர, காரணகர்த்தாக்கள் அல்லர்(they are not the reason: just an outcome)



இந்திய அரசு இந்தப் பிரச்சினையில் ஈடுபட்டிருப்பது வெளிப்படையாகாத வரை, இலங்கைப் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை. அதில் தலையிட முடியாது என்றது. சீனா, பாகிஸ்தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கையில் ஆதிக்கம் பெறுவதைத் தடுப்பதற்காக செய்வதாகச் சொன்னது.
நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய, மும்பை தொடர்வெடிகுண்டுகள், பிறகு அண்மையில் நடந்த தாக்குதல் எனப் பலவாறாக இந்திய மக்களைக்கொன்று குவித்த பாகிஸ்தானோடு இணைந்து கொண்டு தமிழர்களைக் கொண்று குவிக்கிறது.


அப்படியானால், பாகிஸ்தானின் இந்தியா மீதான பயங்கரவாதமென்பது, இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு அதிகார வர்க்கங்களும் தங்கள் மக்களைச் சுரண்ட பரஸ்பர புரிதலுடன் உருவாக்கிக் கொண்ட ஒன்று என்ற எம் சந்தேகம் ஒருபக்கம் இருக்க, இப்போது, விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவ்ரை ஏற்கனவே ஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை.


ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று. ராஜீவ் மீது புலிகளுக்கு வருத்தம் இருந்திருக்கலாமே தவிர, கோபம் இருந்திருக்க வாய்ப்பில்லை. காரணம், ராஜீவ் இந்திராவின் புதல்வர். இந்திரா, தமிழீழத்தின் சிறுதெய்வங்களில் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்திலிருப்பவர்.



இந்தியா சொல்லும் காரணங்கள் அடிக்கடி மாறுவதிலிருந்தே இந்தியா நியாயத்திற்குப் புறம்பாகத்தான் இந்தப்போரில் ஈடுபட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில் நீங்கள் ஏன் நேரடியாகத் தலையிடக்கூடாது? புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஆயுதம் குவிக்கிறார்கள் என்றது இலங்கை. சந்திரிகாவோ, ரணிலோ, மகிந்தாவோ கடந்த காலங்களில் ஒரு கடவுளாக அல்ல, மனிதர்களாகக்கூட நடந்துகொண்டதில்லை.


இவர்கள் ஒரு நிர்பந்தத்தின் பெயரில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுவிட்டார்கள். என்பதால் மட்டுமே போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட வேண்டும். புனரமைப்புப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்று எதிர்பார்ப்பது என்னவகை நியாயம்? தாங்கள் நேர்மையாக நடந்துகொள்வோம் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது மூலமாக மட்டுமே போராளிகளை-ஆயுதத்தைக் கீழே வைக்கச்செய்ய முடியும். கடந்த கால அரசுகள் எவையும் அப்படி செயல்படவில்லை.



உதாரணம் ரணில்- கருணா.
ஆனால், புலிகள் போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு செய்தது ஆயுதம் வாங்கியது மட்டுமல்ல, அது காலாகாலமாக நடப்பதுதானே- ஓர் அரசு நிர்வாகத்தையே உருவாக்கியுருக்கிறார்கள். சர்வதேசத்தின் கண்களில் இது தீவிரவாதமா? அப்பாவித்தமிழர்களைக் காப்பதற்காகத்தான் போரிடுவதாக பசப்புகிறது இந்தியா.


ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். இந்த லட்சணத்தில், தமிழீழ மக்களுக்கான வசதிகளை இலங்கை அரசு செய்யுமாம். அதற்கு இந்தியா உதவுமாம்… வேலிக்கு ஓணான் சாட்சி! இப்போது சர்வதேச செஞ்சுலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ்களைத் தாக்கினார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா?


ப்ரான்சின் 17 மனித உரிமையாளர்களைக் கொலை செய்தார்களே, அவர்களும் விடுதலைப்புலிகளா? சீனாவின் டாங்கிகள், இந்தியாவின் உளவு விமானங்கள், பாகிஸ்தானின் ஆர்டிலரிகள் மட்டுமல்ல… இப்போது எம்மக்களைக் கொலைசெய்து வருவது சர்வதேச சமூகத்தின் மெளனமும்தான் என்பதை எப்போது உணர்வீர்கள்?



நியாயத்தின்பால் பெருவிருப்பு கொண்ட ஒரு மக்கள் சமூகம் பூமியிலிருந்து முற்றாகத் துடைத்தழிக்கப்பட்ட பிறகா? அபாரிஜின்கள், மாயா, இன்கா வரிசையில் நாங்களும் சேர்க்கப்படுவது உங்கள் நோக்கமென்றால், எங்கள் பழங்கதைகள் ஒன்றின்படி ஒவ்வொருநாளும் ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் வந்து உங்கள் முன்னால் தற்கொலை செய்து கொள்கிறோம்… எங்கள் சகோதரிகளையும், குழந்தைகளையும் விட்டுவிட்டுச் சொல்லுங்கள்.


தாங்க முடியவில்லை. அவர்களெல்லாம் மனமார சிரிப்பதை ஒருநாள் பார்ப்போம் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் போராடிக் கொண்டிருப்பதே. ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொள்வதென்றாலும்கூட, விடுதலைப்புலிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றாலும் அப்படி ஒரு தண்டனையை வழங்கும் யோக்கியதை இந்தியாவுக்கோ, இலங்கைக்கோ கிடையாது.
காலம் கடந்து வழங்கப்படும் நீதி அநீதியைவிடக் கொடுமையானது.



1. இந்தியா உடனடியாக தமிழீழத்தின் பகுதிகளிலிருந்து தன் துருப்புகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதோடு, மேற்கொண்டு செயற்கைக்கோள் உதவிகள், ராடார் போன்ற உதவிகளைச் செய்யக்கூடாதென்று சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட வேண்டும். இலங்கையோடு இந்தியா அரசு நடந்தும் முக்கியத்துவமற்ற பேச்சுப்பரிமாற்றங்கள்கூட சர்வதேச சமூகம் மூலமாகவே நடக்க வேண்டும். தமிழக மக்களிடமும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழீழத்தாரிடமும் இந்தியா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.



2. ஐநா பொதுச்செயலாளரான பான் கி மூன், தொடர்ந்து தன் தாயகமான சீனாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருவதால், ஈழம் தொடர்பான முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்படக்கூடாது.



3. இலங்கை அரசு எந்தெந்த நாடுகளிடமெல்லாம் கோரப்பட்டு புலிகள்மீது தடை விதிக்கப்பட்டதோ அந்தந்த நாடுகளில் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்ற குற்றத்திற்காக சிறையிலிருக்கும் அதன் உறுப்பினர்கள் எதுவித நிபந்தனையுமற்று உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.



4. புலிகளின் உறுப்பினர்கள் மீதான பாஸ்போர்ட் தொடர்பான குற்றங்கள் மன்னிக்கப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.


5. புலிகளோடு தொடர்புடையது என்னும் குற்றச்சாட்டின் பேரில் தடை செய்யப்பட தொழில் நிறுவனங்களின் உரிமம் மீண்டும் அளிக்கப்படுவதோடு, தக்க நட்ட ஈடும் வழங்கப்பட வேண்டும்.



6. ராஜீவ்காந்தி கொலை வழக்கு இண்டர்போலால் விசாரிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் இனம்காணப்பட வேண்டும்.


7. பிரணாப் முகர்ஜி, கோத்தபாய ராஜபக்க்ஷே, சந்திரிகா, உதயணகார, கேகலிய ரம்புக்வெல, பசில்ராஜப்க்ஷ மகிந்த, பொன்சேகா போன்றோர் நார்கோ அனிலிசிஸ் சோதனைக்குப்பட வேண்டும்.



8.அமைக்கப்படபோகிற தமிழீழத்தை அங்கீகரிக்கிற உரிமையை மட்டுகே சர்வதேசம் மேற்கொள்ளலாமே தவிர, அது யாரின் தலைமையில் அமையவேண்டும என்பதை தமிழீன மக்கள் தான் முடிவுசெய்வார்கள்


9. புலிகள் கை பலவீனமான நேரத்தில், மலையக மக்கள் மீது நடந்த வந்தாக்குதல், எதிர்காலத்தில் அப்பகுதிகளில் மீண்டும் ஒரு பாரிய இன அழிவு ஏற்படுத்தப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதால், மலையக மக்கள் தமிழீழத்தோடு இணைய விரும்புகிறார்களா என்பதை வாக்கெடுப்பு மூலம் அறிந்து அதன்படி செயல்பட வேண்டும் இந்த விசயத்தில் மலையக மக்களின் முடிவே இறுதியானது.



10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்கும் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.


11. பத்திரிகையாளரான லசந்தவின் கொலைக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.


12. தமிழ்நாட்டிற்கு தஞ்சம் புகுந்திருக்கும் சிங்கள பத்திரிகையாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


13.தமிழ்நாட்டிற்கு அகதிகளோடு அகதியாக வந்த சிங்களத்தம்பதியர் மீதான பாஸ்போர்ட் குற்றச்சாட்டு நீக்கப்பட்டு, அவர்களும் அகதிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.


14. சுட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கான வாழ்வாதரங்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.


என்றும் அன்புடன்,
அநீதிகளுக்கெதிரான உங்கள் சகோதரன்,

கு.முத்துக்குமார், கொளத்தூர், சென்னை-99


அருமைத் தமிழ் மக்களே, அநீதிகளுக்கெதிரான போராட்டத்தில் நம் சகோதர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன். நீங்கள் நகலாயுதம் ஏந்துங்கள். ஆம், உங்கள் கையில் கிடைத்திருக்கும் இந்தத் துண்டறிக்கையை நகலெடுத்து, உங்கள் நண்பர்கள், உறவினர்கள், மாணவர்கள் வசம் கொடுத்து, போராட்டத்திற்கான ஆதரவைப் பெருகப் பண்ணுங்கள் நன்றி.

Friday, January 30, 2009

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?





அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதைத் தெரிந்துகொள்ள, இதோ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு 4.10.1990 அன்று செல்வி ஜெயலலிதா சிறப்புப் பேட்டியொன்று அளித்துள்ளதைப் படித்துப் பாருங்கள்!





சிங்கள ராணுவமும், காவல்துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவிற்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை.





இப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஓர் அதிதீரமான செயல். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்தவேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.





இலங்கைத் தமிழர்களின் கதிபற்றி பிரதமர் வி.பி. சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கவேண்டும். மத்திய அரசு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காணவேண்டும். அல்லது விடுதலைப்புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்கவேண்டும்.



செய்தியாளர்: விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டது. ஆனால், நீங்கள் இன்னமும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே?





ஜெயலலிதா: நம்முடைய முக்கிய நோக்கம் என்ன? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப் படுகொலையிலிருந்தும் பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால், நாம் விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்கவேண்டும்.





செய்தியாளர்: எம்.ஜி.ஆர். செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யவில்லையா?





ஜெயலலிதா: அதற்கான எந்தத் தடயத்தையும் நான் காணவில்லை. ***





இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் மாத்திரமல்ல, 8.10.1990 தேதியிட்ட இந்து இதழிலே ஜெயலலிதா விடுதலைப்புலிகளைப்பற்றி ராஜீவ் காந்தி அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குறிப்பிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அவை வருமாறு:- இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாததற்காக ஜெயலலிதா மத்திய அரசையும், மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் அத்தீவில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்துவிடும் என்று ஜெயலலிதா எச்சரித்தார்.





இது மாத்திரமல்ல, 29.4.1991 தேதிய இந்து நாளேட்டுக்கு ஜெயலலிதா பேட்டியளித்தபோது, பங்களாதேஷ் பிரச்சினையில் இந்திரா காந்தி செய்ததைப்போல ராணுவ நடவடிக்கைபற்றி இந்தியா சிந்தித்தால், அதில் தவறு எதுவுமில்லையென்று நான் கருதுகிறேன் என்றும் கூறி அது வெளிவந்துள்ளது.





ஜெயலலிதாவிற்கு இன்று நெருங்கிய ஆதரவாளராக உள்ள சுப்பிரமணியம் சுவாமி 21.7.1995 அன்று ஜெயின் கமிஷன் விசாரணையிலே கூறியது என்ன தெரியுமா?





ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரச்சாரகராகவே விளங்கினார். ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாமென்று ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால், அ.தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி வைத்திருந்தபோதிலும், ராஜீவ் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, விமான நிலையத்திலே ராஜீவ் காந்தியை வரவேற்கவும் செல்லவில்லை.





விடுதலைப்புலிகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவாளராக இருந்தவர் தற்போது விடுதலைப்புலிகளுக்குத் தான் என்றைக்கும் எதிரியாக இருந்துள்ளதாக கடைந்தெடுத்த பொய்யைக் கூறி யாரை ஏமாற்ற முயலுகிறார்?



நன்றி: "முரசொலி

தானத்தில் சிறந்தது உடல்தானம்!





இரத்த தானம், கண் தானம் தாண்டி இன்று உடல் தானம் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. மனித சமுதாயம். மருத்துவர்களான திரு.அசோகன், திருமதி. புஷ்பாஞ்சலி பெற்றோர்கள் தனது மகன் இதயந்திரனுக்கு விபத்தில் முளை மரணம் ஏற்பட்டவுடன் முடிவெடுத்து சிறுமி அபிராமிக்கு இதயத்தை தர சம்மதித்து வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை நடந்து இன்று அபிராமி உடல் நலம் பெற்று பேசுவதைக் கண்டு "எங்கள் மகன் இதயேந்திரன் சாகவில்லை அபிராமி உருவில் வாழ்கிறான்''என உருக்கமாக தெரிவித்தார்கள்.





சிறுமி அபிராமியின் தாய் மஞ்சுளா "எத்தனையோ கடவுள்களை வேண்டினோம் எந்தக் கடவுளும் உதவவில்லை. என் மகளின் உயிர்காத்த நீங்கள் தான் கடவுள்" என்று இதயேந்திரன் பெற்றோரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க நன்றி கூறினார். மனிதநேயம் இன்னும் மறைந்துவிடவில்லை என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இந்த நிகழ்வு. இந்த செய்தியினை படித்தோம், நெகிழ்ந்தோம், பாராட்டினோம் என்று இருந்து விடாமல். உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும்.





ஒருவர் இறந்தவுடன் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம்.தீயுக்கும், மண்ணிற்கும் இரையாகும் இந்த சடலத்தை மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்கு வழங்குவதில் தவறு இல்லை. தசாவதாரம் புகழ் சாதனையாளர் கலைஞானி கமலகாசன் தனது உடலை தானமாக மருத்துவக்கல்லூரிக்கு வழங்க உள்ளார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இது போன்ற நற்பணிக்கு முன்வர வேண்டும்ரத்த தானம் தந்தால் விபத்தில் ரத்தம் இழந்தவருக்கு உயிர் காக்கும் மருந்தாக இந்த ரத்த தானம் உதவும். எனவே தயக்கமின்றி ரத்த தானம் வழங்கிட பொதுமக்கள் முன் வரவேண்டும்.





விழி தானம் நாம் எழுதி கொடுத்து விட்டால் மட்டும் போதாதது வந்து எடுத்துச் செல்வார்கள். 30 நிமிடங்களில் வேலை முடிந்துவிடும்.மற்ற இறுதிச் சடங்குகளை வழக்கம் போல செய்து கொள்ளலாம்.கண் தானம் வழங்கினால் பார்வையற்ற இரண்டு நபர்களுக்கு பார்வை கிடைக்கின்றது. இறந்த பின்னும் இந்த உலகை ரசிக்கும் அறிய வாய்ப்பு. வீணாக தீயுக்கும்,மண்ணிற்க்கும் இரையாகும் விழிகளைத் தானம் செய்வோம், பார்வையற்று விழிகளுக்காக காத்து இருப்போர் நம் நாட்டில் பல்லாயிரம் பேர்.





விழிதானம் தந்துவிட்டால், உடலில் ஒர குறை இருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற மடத்தனமாக முட நம்பிக்கை நம்மில் பலருக்கு உள்ளது. இந்த முட நம்பிக்கை அகற்றப்பட வேண்டும் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும் பார்வையற்ற சகோதரர்களின் இன்னல்களை பார்வையுள்ள நாம் பத்து நிமிடங்கள் கண்ணைக் கட்டி கொண்டு நடந்தால் துன்பத்தை உணர முடியும். எனவே "பார்வையற்ற சகோதரர்களுக்கு இறந்த பின் பார்வையாக இருப்பதைப் போன்ற நல்ல செயல் உலகில் எதுவுமில்லை" என்பதை அனைவரும் உணர்வோம்.





மதுரை அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் பார்வையற்ற எம்.பழனியப்பன் தலைமையில் 25பேர் ரத்ததானம் வழங்கி கண்தான விழிப்புணர்வு விதைத்தனர்.விபத்தில் முளைச்சாவு நேர்ந்தால் இனி பிழைக்க வழி இல்லை என்பதை மருத்துவர் அறிவித்தால் உடன் உடல் தானம் தரும் துணிவான முடிவை எடுக்க முன் வர வேண்டும். பகுத்தறிவு பெற்ற இனம் மனித இனம். எனவே பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்து பிறருக்கு உதவும் மனித நேயத்தையுப் பெற வேண்டும்.





இதயேந்திரனின் இதயம் மட்டுமல்ல இரண்டு விழிகள்,இரண்டு சிறுநிரகம், கல்லீரல், எலும்புகள் என பல்வேறு உறுப்புகளை தானமாக வழங்கி உலக மனிதர்கள் அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்து இருக்கிறார்கள். முன் மாதிரியாக அவர்கள் செய்த அரிய செயலை எல்லோரும் செய்யும் மனநிலை பெற வேண்டும்.இறந்தவுடன் மருத்துவ ஆராச்சி மாணவர்களுக்கு உடலைத் தரும் உயர்ந்த முடிவுக்கும் மனித சமுதாயம் வர வேண்டும். இந்த ஆராய்ச்சியின் காரணமாக மனிதனின் இறப்பைக் கூட இல்லாது செய்யும் நிலை வரலாம். பிறப்பை தடுக்க விஞ்ஞானத்தால் கற்றோம்.





இறப்பையும் தடுக்க விஞ்ஞானத்தில் முடியும், முடியாதது உலகில் எதுவுமில்லை. மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு மனித இனத்தின் உச்ச நிலைக்கு வளர நாம் எல்லோரும் சிந்தனையை செலவிடுவோம். விலை மதிப்பற்ற மனித உயிர்களைச் காப்போம் மனிதநேயம் போற்றுவோம். சாதிமத வெறிகளை மாய்ப்போம்.





(கட்டுரை - கவிஞர் இரா.இரவி)‏

Wednesday, January 28, 2009

நான் ஒரு பண்புள்ள மனிதன் - பி.ஆர். அம்பேத்கர்





தனிப்பார்வைக்கு



பி.ஆர். அம்பேத்கர்



தாமோதர் ஹால்பரேல்,



பம்பாய்9-12-1924






அன்பார்ந்த திரு. பண்டிட்,



இம்மாதம் 6 அன்று எழுதிய தங்கள் கடிதத்திற்கு மிக்க நன்றி. இக்கடிதத்தின் உள்ளடக்கத்தை நான் மிகக் கவனமாகப் படித்தேன். பரோடா அரசுடனான எனது முந்தைய கடிதப் போக்குவரத்தை தாங்கள் பார்த்திருந்தால், அரசுக்கான என் கடமையை நினைவுபடுத்த வேண்டிய அவசியத்தை தாங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள்.






எனக்கும் பரோடா அரசுக்கும் இடையிலான சட்ட ரீதியான உறவுகள் என்னவாக இருந்தாலும், எனக்காக அரசு செலவழித்த பணத்தைக் கொடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்பது குறித்து அவர்களுக்குப் பல முறை எழுதியுள்ளேன்.என்னை நம்புங்கள், என்னிடம் பணமிருந்தால், இப்பொழுதே ஒரு நிமிடமும் தாமதிக்காமல் எனது கடமையை நிறைவேற்றி இருப்பேன்... ஆனால், நான் இன்றுள்ள நிலையில் வாழ்வதற்கே போதுமான பணம் என்னிடமில்லை.






இந்நிலையில் என் கடன்களைத் திருப்பித் தர எப்படிப் பணம் ஒதுக்க முடியும்?... இத்தகைய சூழலில், நான் எவ்வளவுதான் விரும்பினாலும், இப்போதைக்கு பணத்தைத் திருப்பித்தர என்னால் இயலாது. கொடுக்க முடியாத எனது இயலாமையை நான் திருப்பிக் கொடுக்க விரும்பவில்லை என்று பரோடா அரசு பொருள்படுத்திக் கொண்டால் அவர்களுக்குள்ள ஒரே வழி, அது அவர்களுக்கு உண்மையில் ஏற்புடையதாக இருக்கும் என்று கருதினால் நீதிமன்றத்திற்குப் போய் தீர்ப்பைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவதுதான்.






விஷயம் நீதிமன்றத்திற்குச் சென்றால், சமூகத்தின் பெயர் பாதிக்கப்படும். மாறாக, நான் என்ன நினைக்கிறேன் என்றால், வழக்கு நடைபெறும்போது பரோடா அரசிடம் நான் எப்படி நடந்து கொண்டேன் என்று சமூகம் தெரிந்து கொண்டால், என் பக்கம் நான் வெட்கப்பட வேண்டியது எதுவும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.






மாறாக, இவ்வழக்கு நடைபெறும்போது சேறு வாரி இறைக்கப்படும். அதில் சற்று, மேன்மை தாங்கிய பரோடா மன்னர் மீதும் ஒட்டிக் கொள்ளும். அப்பொழுது இருவருமே வெட்கப்பட வேண்டும்.இவையெல்லாம் தவிர்க்கப்பட்டால் நிச்சயமாக நல்லது. இதைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி, திருப்பிக் கொடுக்கும் நிலைக்கு நான் வரும்வரை, பரோடா அரசு எனக்கு அவகாசம் அளிப்பதுதான்.






பரோடா அரசு என்னைப் போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை. நான் ஒரு பண்புள்ள மனிதன் என்பதை ஒரு முறை அவர்களுக்கு எடுத்துக் காண்பித்தேன். என்னிடம் போதுமான பண்பு இல்லையெனில், நான் பரோடாவுக்கு திரும்பி வந்திருக்க மாட்டேன். பிரிட்டிஷ் பணியில் நுழைய எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு பண்புள்ள மனிதனைத் தவிர, வேறு யாரால் இவற்றைத் தூக்கி எறிந்திருக்க முடியும்?






நான் சுதந்திரமானவன் என்று மட்டுமே அவர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், பண்புள்ள ஒருவன்தான் சுதந்திரமாக இருக்க முடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.அரசுக்கான கடமையை செய்ய நான் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறேன் என்றும், நான் கஷ்டப்படுவதால்தான் உடனே அதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.






எப்பொழுது நான் லகுவான நிலையில் இருப்பேனா, அப்பொழுதே பணத்தை திருப்பிக் கொடுக்கத் தொடங்குவேன் என்பதைத் தாங்கள் நம்பலாம். இதற்கு மேல் இப்பொழுது எதையும் சொல்லவோ, செய்யவோ முடியாது.நான் வெளிப்படுத்தியுள்ள உண்மையான நோக்கம் என்னவெனில், அந்தத் தொகையை பம்பாய் பல்கலைக்கழகத்திற்கு திருப்பிக் கொடுத்து, அந்தத் தொகையில் பரோடா அரசு பெயரில், தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்க ஏற்பாடு செய்ய பல்கலைக் கழகத்தை கேட்டுக் கொள்ளத்தான் இந்தத் தொகை தாழ்த்தப்பட்ட சாதியினரின் ஓர் உறுப்பினர் என்ற அடிப்படையில் எனக்காக செலவிடப்பட்டது.






எனவே, அரசின் தனிப்பட்ட முறையிலான செலவுக்கு அந்தப் பணம் செலவழிக்கப்படக் கூடாது என்பதும், தாழ்த்தப்பட்ட சாதியினரின் நலனுக்காகவே அது பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன். ஆனால், இத்தகைய ஒரு வியாபார முறையில் அரசு செயல்பட்டு வருவதால், எனது திட்டம் பாராட்டப்படும் என்று நான் கருதவில்லை.






எனக்கும் பரோடா அரசுக்கும் இடையே தீர்மானிக்கும் முடிவை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்.






தங்கள் உண்மையுள்ள,(பி.ஆர். அம்பேத்கர்)






(டாக்டர் அம்பேத்கர் அயல்நாடு சென்று படிப்பதற்காக, பரோடா மன்னர் சயாஜிராவ் கெய்க்வாட் அரசு, அவருக்கு 20,434 ரூபாய் கல்வி உதவித் தொகை அளித்தது. இத்தொகையை திருப்பித்தர வலியுறத்தி பரோடா அரசு அதிகாரிகள், மன்னருக்குத் தெரிவிக்காமலேயே (நீதிமன்றத்திற்குச் செல்வது உள்ளிட்ட) நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதற்கு டாக்டர் அம்பேத்கர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.






டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1); பக்கம் 215)

Tuesday, January 27, 2009

அன்று இடித்தவர்கள், இன்று பரிகாரம் தேடுகிறார்கள்!


மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார்?' (திருக் குர்ஆன் 2:114)


பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மஸ்ஜிதின் நடுக்கோபுர உச்சியில் கடப்பாரையுடன் நிற்கும் இரண்டு பேர், நினைவிருக்கிறதா?


இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை தன் ஊருக்கு எடுத்துச்சென்று ‘ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்' என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழிக்க வைத்தவர் இன்று இஸ்லாத்தில் இணைந்து 100 பள்ளிவாசல்களையாவது புனர் நிர்மாணம் செய்ய உறுதிபூண்டு தன் பாவத்துக்கு பரிகாரம் தேடும் அதிசயம்!


அவ்விருவரும் இன்று முஹம்மது ஆமிர், முஹம்மது உமர் என்று பெருமையோடு கூறுவதுடன் பல மஸ்ஜிதுகளை கட்டுவதையும், புனர்நிர்மாணம் செய்வதையும் தமது பிறவிப்பலனாக கருதி செய்து வருகின்றனர். இந்த அதிசயம் எப்படி நடந்தது? இவர்கள் முஸ்லிம்களாவதற்கு யார் காரணம்? என்ன காரணம்?அறிந்து கொள்ள உள்ளே நுழைவோம்!


பல்பீர் சிங் - 6-12-1970-ல், ஹரியானாவிலுள்ள பானிபட் மாவட்டத்திலள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவர் தந்தை ஒரு சிறந்த விவசாயி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்பதோடு நல்லவர், மனிதநேயமிக்கவர். பிறருக்கு அநீதம் விளைவிப்பதை கடுமையாக வெறுப்பவர்.


மும்பாய்க்குப் பிறகு 'சிவசேனா' வின் உறுதிமிக்க கோட்டையான பானிபட்டடில் வாலிபர்களும் மாணவர்களும் சிவசேனாவில் ஈடுபட்டிருந்த நேரம் அது.; பானிபட்டில் இன்டர் மீடியேட்டில் படித்துக் கொண்டிருந்த போது பல்பீரசிங்; 'அந்த' இயக்கத்தில் தன்னை பதிவு செய்து சேர்ந்து கொண்டார்.


பானிபட்டில், இந்திய வரலாற்றை எடுத்துக் கூறும் சாக்கில், வாலிபர்களிடையே முஸ்லிம்கள் மீதும், பாபர் போன்ற முஸ்லிம் மன்னர்கள் மீதும் வெறுப்பை ஊட்டப்பட்டது. தனது மகன் ‘அந்த’ இயக்கத்தில் சேர்ந்ததை அறிந்த பல்பீர்சிங்குடைய தந்தை உண்மை சரித்திரத்தை தனது மகனுக்கு புரிய வைக்க முயன்றார்.


"பாபர் மற்றும் அவ்ரங்கசேப் ஆட்சிக்காலத்தில் இருந்த நீதம், முஸ்லிம் அல்லாதோருடன் அவர்கள் நடந்து கொண்ட நன்னடத்தைகளையும், இந்திய மக்கள் தமக்குள்ளே மோதி இந்நாடு பலவீனப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலேயர்கள் வரலாற்றுத் திரிபுகள் செய்துள்ளனர்" என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லியும் தனது மகனை அவரால் திருத்த முடியவில்லை.


1990-ல் அத்வானியின் ர(த்)த யாத்திரையின்போது பானிப்பட்டின் முக்கிப் பொறுப்பு பல்பீர் சிங்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. ர(த்)த யாத்திரையில் வந்த தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை கக்க அந்த நிமிடமே மஸ்ஜிதை இடிக்க எவர் வந்தாலும் வராவிட்டாலும் தான் மட்டுமே சென்று அதை இடித்துத் தரை மட்டமாக்குவதாக சிவாஜியின் மீது சத்திய பிரமானம் எடுக்கிறார் பல்பீர் சிங்.


சிவசேனாவின் ‘இளைஞர் பறக்கும் படை' யின் துணைத்தவைராக பொறுப்பேற்று 1990 அக்டோபர் 30 அன்று அயோத்திக்கு புறப்பட்ட அவரை ஃபஸாபாத்தில் போலீஸார் தடுத்து நிறுத்துகின்றனர். அதையும் மீறி அவரும் அவரது நண்பர்களும் எப்படியோ தப்பி அயோத்திக்குள் நுழைந்து விடுகின்றனர். அதற்கு முன்னர்தான் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருந்ததால் எவ்வளவோ முயன்றும் அவர்களால் பாபரி மஸ்ஜிதை நெறுங்கக்கூட முடியவில்லை.


கோபம் எல்லை மீறியது. அப்பொழுதே உடனே லக்னோ சென்று முலாயம் சிங்கை தனது கரங்களால் சுட்டுப் பொசுக்க அவர் உள்ளம் நாடியது. அங்கு சோனிப்பட்டின் ஜாட் இனத்துக் கிராமத்தைச் சார்ந்த அவரது நண்பர் யோகேந்திர பாலும் சேர்ந்து கொண்டார். யோகேந்திர பாலின் தந்தை ரகுபீர் சிங் சௌத்ரி பெரும் நிலச்சுவான்தரராக இருந்தார். அவர் எவ்வளவோ தடுத்தும் இவர்கள் சற்றும் பின் வாங்கவில்லை.


டிசம்பர் - 6, 1990 – க்கு முந்தைய இரவு பாபரி மஸ்ஜிதை நெருங்கி அருகிலுள்ள முஸ்லிம்களின் வீட்டு மாடியில் இரவைக் கழித்தனர். தலைவர்களின் உத்தரவை எதிர்பார்க்காமல் கரசேவையை துவங்கி விட அவர் உள்ளம் துடித்தது. அவ்வளவு அவசரம்! இருந்த போதும் குழுத்தலைவர் கட்டுக்கோப்புடன் இருக்கும்படி கூறி தடுத்து விட்டார்.இந்நிலையில் கரசேவகர்ளுக்கிடையில் உமாபாரதி உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்டதுமே பல்பீர் சிங்கும் அவரது நண்பர்களும் தங்கியிருந்த வீட்டின் மாடியிலிருந்து இறங்கி கடப்பாறையுடன் மஸ்ஜிதின் முகட்டில் ஏறினர்.


உமாபாரதி ம்… ஏக், தோ, பாபர் மஸ்ஜித் தோடுதோ! (ஒன், டூ … இடியுங்கள் பாபர் மஸ்ஜிதை) என்று முழங்க அந்த நாசகாரக் கும்படலுன் பல்பீர் சிங்கும் மஸ்ஜிதின் நடுக்கோபுரத்தின் மீது கடப்பாறையை செலுத்தி கொக்கரித்தபடி இடித்துத் தரை மட்டமாக்குகிறார். அதற்குப்பிறகு அந்த இடத்தில் சிலையை நட்டு விட்டு திரும்புகின்றனர். திரும்பும்போது இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் இரு செங்கற்களை உடன் எடுத்துச் செல்கின்றனர்.


அச்செங்கற்களை பானிபட்டில் தனது மற்ற நண்பர்களிடம் காட்டி பாராட்டையும் பெறுகின்றனர். சிவசேனா அலுவலகத்தில் அக்கற்கள் வைக்கப்பட்டு ஒரு விழாவே நடந்தது. இந்நிகழ்வுகள் அனைத்தும் தெரிய வந்தபோது பல்பீர் சிங்கின் தந்தை மிகவும் கோபமுற்றார். தனது மகனிடம், "இப்போது இந்த வீட்டில் நீயும் நானும் ஒன்றாக இருக்க முடியாது. இறைவனின் இல்லத்தை இடித்தவனின் முகத்தை நான் பார்க்க மாட்டேன். எனது மரணம் வரும் வரை உன் முகத்தைக் காட்டாதே" என்று உறுதிபடக் கூறிவிட்டார்.


இதை சற்றும் எதிர்பார்க்காத பல்பீர் சிங் பானிபட்டில் தனக்கு கிடைத்த மரியாதையை அவரிடம் எடுத்துச் சொல்லியும் அவரது கோபம் தணியவில்லை. "இத்தகைய அநியாயக்காரர்களினால் இந்த நாடே அழிந்து போகும்" என்று கூறியவராக வீட்டை விட்டு வெளியேற தயாரானார். தந்தையின் கோபத்தைக் கண்ட பல்பீர் சிங் தானாகவே அவ்வீட்டை விட்டு வெளியேறி பானிபட்டில் தங்கினார்.


அதற்குப்பிறகு நடந்த சம்பவங்களைப்பற்றி அவரே கூறுகிறார், கேளுங்கள்:நான் முஸ்லிமாவதற்கு படிப்பினையாக இருந்த எனது நண்பன் யோகேந்திரபாலின் சம்பவத்தை முதலில் சொல்கிறேன். பிறகு என் சம்பவத்தை கூறுகிறேன். எனது நண்பன் யோகேந்திரபாலும் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் செங்கல்லை எடுத்து வந்திருந்தான். 'ஹிந்து சகோதரர்கள் அனைவரும் அந்த செங்கல்லின் மீது மூத்திர தானம் செய்யுங்கள்’ என்று ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தான்.


மஸ்ஜிதிலிருந்து எடுத்துவரப்பட்ட கற்களை கேவலப்படுத்த ஒவ்வொருவராக வந்து சிறுநீர் கழித்தனர்.. இங்குதான் ‘மஸ்ஜிதின் எஜமானன் அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபித்தான்'. இறையாலயத்தின் செங்கல் மீது சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய நான்கைந்து நாட்களுக்குப்பின் யோகேந்திரபாலுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. தனது ஆடைகளை சுற்றி எறிந்துவிட்டு நிர்வாணமாக அலைந்தான். இவன் கண்ணியமிக்க ஜமீன்தாரின் ஒரே மகன்.


பைத்தியம் முற்றி தாயின் ஆடையை உரிந்து தவறான செயலில் ஈடுபட முயன்றான். பலமுறை இத்தீய எண்ணத்தில் பெற்ற தாயை கட்டியணைத்தான். அவனது தந்தை பரிதவித்து மந்திரிப்போர் பலரிடம் தன் மகனை காட்டினார். தானதர்மங்கள் செய்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். ஆனால், யோகேந்தர் நிலை மென்மேலும் மோசமடைந்தது. மீண்டும் ஒரு முறை பெற்ற தாயை உடலுறவு கொள்ள அவன் முயன்றபோது தாயாரின் கூச்சலைக் கேட்டு அக்கம் பக்கத்தவர்கள் ஓடி வந்து தாயை காப்பாற்றினர். நிலைமை மிக மோசமானதால் யோகேந்தர்பால் சங்கிலியால் கட்டப்பட்டான்.


மக்களிடம் மதிப்பு மிக்க அவனது தந்தை அவனை சுட்டுக்கொல்ல நாடினார். அப்போது ஒருவர் ‘சோனிபட் ஈத்காவில் ஒரு மதரஸா உள்ளது. அங்கு பெரிய மவ்லானா ஒருவர் வந்து செல்கிறார். கடைசி முயற்சியாக அவரிடம் சென்று உங்கள் பிரச்சனையை கூறுங்கள். அங்கும் பிரச்சனை தீரவில்லை என்றால் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று கூறினார். சோனிபட்டில் நடந்தது என்ன?ஆனால் அவரால் பெரிய மவ்லானா(கலீம் சித்தீக்கி)வை சந்திக்க முடியவில்லை.


மகனை சங்கிலியால் கட்டிக்கொண்டு டில்லி-பாவானாவின் இமாம் மவ்லானா பஷீர் அஹ்மதை சந்தித்தார். அனைத்தையும் கேட்டுவிட்டு பஷீர் அஹ்மது இப்படிச் சொன்னார். தற்போதைய நிலைமை மோசமாக இருப்பதால் டிசம்பர் 6 க்கு (1992) முன்பே ஹரியானாவின் பல இமாம்கள், ஆசிரியர்கள் உ.பி.யிலுள்ள தங்களது வீடுகளுக்கு திரும்பி விட்டனர். இந்நிலையில் இம்மாதம் முதல் தேதிதான் பெரிய மவ்லானா (கலீம் சித்தீக்கி) கவலையுடன் உரையாற்றினார்கள்.


அதில் முக்கிய சில வரிகளைக் கூறுகிறேன். ‘முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ், இஸ்லாம், மஸ்ஜித், இறைத்தூது பற்றி முன்பே எடுத்துக் கூறியிருந்தால் இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்காது. எனவே பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதில் முஸ்லிம்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே!


ஆகவே. இப்பொழுதாவது நாம் உணர்வு பெற்று அழைப்பப்பணியில் ஈடுபட்டால் மஸ்ஜிதை இடித்தவர்களே மஸ்ஜிதை நிர்மாணிப்பவர்களாக, புனர் நிர்மாணம் செய்பவர்களாக மாறிடுவர். ஏனெனில் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யா அல்லாஹ்! என் சமூக மக்களுக்கு நேர்வழி காட்டு, அவர்கள் அறியாதவர்களாக உள்ளனர்’ என்று பிரார்த்தித்தார்கள் - என்று பெரிய மவ்லானா குறிப்பிட்டார்கள். உங்கள் மகனுக்கு சூனியம் எதுவும் இல்லை. இது எஜமானனின் தண்டனைதான்.


ஆகவே, நாளை மறுநாள் புதன் கிழமை மவ்லானா கலீம் சித்தீக்கி இங்கு வரும்போது உங்கள் மகனின் நிலையை கூறுங்கள். அவர் சரியாக்கி விடுவார் என்று நம்பிக்கை உள்ளது என்றார் பஷீர் அஹ்மது. அதற்கு யோகேந்தர்பாலின் தந்தை என் மகன் குணமடைந்து விட்டால் நான் எதையும் செய்ய தயாராக உள்ளேன் என்று பதிலளித்தார்.


புதன் கிழமையன்று ஜமீன்தார், சங்கிலியால் கட்டப்பட்டு அரை நிர்வாணக் கோலத்துடன் இருந்த தன் மகன் யோகேந்தர்பாலுடன்; மல்லானாவை சந்தித்தார். அவர் சொன்ன அனைத்தையம் கேட்டுக்கொண்ட மவுலானா கலீம் சித்தீக்கி ‘உங்கள் மகன் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் இல்லத்தை இடித்த மாபெரும் அநீதி இழைத்துள்ளான். இத்தண்டனை இவர் ஒருவருக்கு கிடைத்தது மிகவும் குறைவுதான். நாங்களும் அந்த இறைவனின் அடிமைகளே!


மஸ்ஜிதை இடித்தவர்களுக்கு இறையில்லம் என்றால் என்னவென்பதை எடுத்துரைக்க நாங்கள் தவறிவிட்டதால், இப்பெரும் அநீதத்திற்கு நாங்களும் ஒருவிதத்தில் காரணமாக உள்ளோம். இப்போது எதுவும் எங்கள் கையில் இல்லை. ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அந்த ஏக இறைவனின் சமூகத்தில் அழுது மன்றாடுங்கள். நாங்களும் மன்னிப்பு வேண்டுகிறோம். இம்மஸ்ஜிதின் நிகழ்ச்சி முடிவுறும் வரையில் நீங்கள் இறைவனிடம் ‘இறைவா! என் சிரமத்தை உன்னைத்தவிர வேறு எவராலும் நீக்க முடியாது’ என்று மாசற்ற உள்ளத்துடன் மன்றாடி பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் என்று கூறிவிட்டு மஸ்ஜிதுக்குள் சென்று தொழுதார்;.


சிறிதுநேரம் உரையாற்றி துஆ செய்ததுடன் மற்றவர்களையும் ரகுபீர்சிங் - யோகேந்தர்பால் ஆகியோருக்காக துஆச் செய்ய கூறினார். நிகழ்ச்சிக்குப்பின் மஸ்ஜிதிலேயே உணவு பரிமாறப்பட்டது. உணவு முடித்து வெளியே வந்தால் அனைவருக்கும் மிகப்பெரும் ஆச்சர்யம்! அல்லாஹ்வின் கிருபையை என்னவென்பது! இத்துனை நாட்களாக நிர்வாணத்துடன் திரிந்து கொண்டிருந்த யோகேந்தர்பால் திடீரென தன் தந்தையின் தலைப்பாகையை கழற்றி தனது உடலை நன்கு மறைத்து தந்தையுடன் சாதாரண மனிதன் போல் பேசிக் கொண்டிருந்தான்.


பைத்தியம் தெளிந்த அவனைக்கண்ட அனைவருக்கும் மகிழ்ச்சி. ஜமீன்தார் ரகுபீர்சிங்கிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி. இஸ்லாத்தை தழுவுவதற்காக ரகுபீர்சிங் மஸ்ஜிதுக்குள் நுழைய விழைந்ததைக் கண்ட யோகேந்தர்பால் ‘தந்தையே! சற்றுப்பொறுங்கள்! உங்களுக்கு முன் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும். பாபரி மஸ்ஜிதை நான் திரும்பவும் கட்ட வேண்டும்’ என்று கூறினார். பிறகு இருவரையும் ஒளு செய்ய வைத்து கலிமா சொல்லிக் கொடுக்கப்பட்டது. ரகுபீர்சிங் - முஹம்மது உஸ்மானாக, யோகேந்தர்பால் - முஹம்மது உமர் ஆக மாறிவிட்டார்கள்.


இருவரும் சந்தோஷமாக ஊர் திரும்பினார்கள். தமது ஊர் திரும்பியவர்கள் முதல் வேலையாக அவ்வூர் மஸ்ஜிதின் இமாமை சந்தித்து தாங்கள் முஸ்லிமாகிவிட்ட விபரத்தை தெரிவித்தனர். இமாம் இச்சம்பவங்களை மக்களிடம் எடுத்துக்கூற அந்த பகுதி முழுவதும் செய்தி பரவியது. ஹிந்துக்களுக்கு இச்செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களில் சிலர் அவசரமாக ஆலோசனை செய்து இவ்விருவரையம் அன்று இரவே கொன்றுவிட வேண்டும் முடிவு செய்தார்கள்.


இல்லையேல் பலரும் இஸ்லாத்துக்கு மாறிவிடுவார்கள்' என்ற பயம் அவர்களுக்கு! அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நபர் இச்செய்தியை இமாம் ஸாஹிபிடம் தெரிவித்து விட்டதால் அல்லாஹ்வின் அருளால் அன்ற இரவே அவர்கள் இருவரும் ஊரைவிட்டு வெளியேறி புலத் சென்று சிலநாட்களுக்குப்பின் 40 நாள் ஜமா அத்தில் சென்று விட்டனர். முஹம்மது உமர் ஜமாஅத் அமீரின் ஆலோசனைப்படி மேலும் 4 மாதங்கள் ஜமாஅத்தில் சென்று விட்டார். இதன் தொடராக அவரது தாயாரும் முஸ்லிமாகிவிட்டார்.


டில்லியில் சிறந்ததொரு முஸ்லிம் குடும்பத்தில் முஹம்மது உமருக்கு திருமணமும் நடந்தது. தற்போது அனைவரும் மகிழ்ச்சியடன் டெல்லியில் வசிக்கின்றனர். சொந்த ஊரிலுள்ள சொத்துக்களை விற்று டெல்லியில் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி, தான் இஸ்லாத்தை எற்ற நிகழ்ச்சியின் முதல் பகுதிதான் என்று கூறும் முஹம்மது ஆமிர் (பல்பீர்சிங்) இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு எப்படி?


கேள்வி: உங்கள் நண்பர், அவர் தந்தையின் இஸ்லாம் பற்றி கூறினீர்கள். நீங்கள் இஸ்லாத்தை தழுவியதைப்பற்றி கூறுங்களேன்?


பதில்: முஹம்மது உமர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி நான் இஸ்லாத்தை ஏற்ற நிகழச்சியின் முதல் பகுதிதான். இதோ நான் இஸ்லாத்தை ஏற்றதை கூறுகிறேன்! கேளுங்கள்.


9-மார்ச் 1993-ல் எனது தந்தை திடீரென மாரடைப்பால் மரணித்து விட்டார். பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும் அதில் நான் பங்கெடுத்ததும் அவரை மிகவும் பாதித்திருந்தது. அவர் என் தாயரிடம், "இறைவன் நம்மை ஏன் முஸ்லிமாக படைக்கவில்லை? முஸ்லிம் குடும்பத்தில் பிறந்திருப்பின் குறைந்த பட்சம் அநீதம் இழைக்கப்பட்டவர்களில் நானும் ஒருவனாகியிருப்பேனே? அநீதி இழைக்கும் கூட்டத்தாரில் நம்மைபிறக்கச் செய்து விட்டானே?" என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்.


மேலும் தான் இறந்த பிறகு தனது இறுதி சடங்கில் நான் கலந்து கொள்ளக்கூடாது என்றும், தனது சடலத்தை அநீதம் செய்யும் கூட்டத்தாரின் வழமை போல் எரிக்கக் கூடாது ஹிந்துக்களின் அடக்கஸ்தலங்களுக்கும் எடுத்துச் செல்லக்கூடாது. மண்ணில் புதைத்துவிடுங்கள் அல்லது தண்ணீரில் மூழ்கடித்து விடுங்கள் என்று தமது ஆசையை வெளிப்படுத்துயிருந்தார்.


(மறுமையில் இவர்களின் நிலை என்ன என்பதை அல்லாஹ் ஒருவனே அறிவான்)எங்களது வீட்டினர் அவரது ஆசைப்படியே அனைத்துக் காரியங்களையும் செய்தனர். எட்டு தினங்களுக்குப் பிறகே அவரது மரணச் செய்தியை கேள்விப்பட்ட நான் மிகவும் நொடிந்துவிட்டேன். என் உள்ளம் நொறுங்கிவிட்டது.


"அவர் இறந்த பிறகுதான் பாபரி மஸ்ஜிதை இடித்தது எனக்கு அநீதியாகப்பட்டது எனது பெருமை அனைத்தும் கைசேதமாக தெரிந்தது.." நான் மிகவும் மனம் வெதும்பி எனது இல்லம் சென்றடைந்தபோது எனது தாய் என் தந்தையின் கவலையை பிரஸ்தாபித்து அழுது கொண்டிருந்தார்;. ஒரு சிறந்த தந்தையை துன்புறுத்தி கொன்றுவிட்டாயே! நீ ஒரு மனுஷனா? என்று இடித்துரைத்தார்.


இதன் பின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டேன். யோகேந்தர்பாலுடன் சந்திப்புஜுன், 1993-ல் முஹம்மது உமர் (யோகேந்தர்பால்) ஜமா அத்திலிருந்து பானிபட் வந்து என்னை சந்தித்தார். தனது சம்பவங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினர். இரண்டு மாதங்களாக வானிலிருந்து ஆபத்து ஏதும் எனக்கு இறங்கிடுமோ என்று பயந்தேன். தந்தை இறந்த கவலையும் பாபரி மஸ்ஜித் இடிப்பும் என்னை வாட்டி வதைத்தன.


முஹம்மது உமரின் சம்பவம் கேட்டு மேலும் கலக்கம் அடைந்தேன்.ஜுன், 23ஆம் தேதி மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் சோனிபட் வரவிருப்பதாகவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் சில நாட்கள் தங்குவது தான் சிறந்தது எனவும் முஹம்மது உமர் மிகவும் வலியுறுத்தி கூறினார். நான் மௌலானாவை சந்திக்க திட்டமிடலானேன் எனினும் நான் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது எனக்கு முன்பாகவே முஹம்மது உமர் சென்று என்னை பற்றிய முழு விபரத்தையும் மௌலானாவிடம் தெரியப்படுத்திவிட்டார்.


நான் மௌலானாவிடம் சென்ற போது மிகவும் அன்புடன் வரவேற்றார்கள். மேலும் யோகேந்தர்பாலுக்கு அல்லாஹ் தண்டனை அளித்தது போல் நீங்கள் செய்த பாவத்திற்கும் அல்லாஹ் தண்டனை அளித்திருக்க முடியும். அதே சமயம் இவ்வுலகில் தண்டனை கிடைக்காவிட்டாலும் மறுமையின் தண்டனை நிரந்தரமானது அத்தண்டனை எப்படியிருக்குமென உமது சிந்தனைக்கே எட்டாது என்றார்கள்.


முஸ்லிமாவதே தீர்வு:ஒரு மணி நேரம் மௌலானவுடன் அமர்ந்த பின் "இறை வேதனையிலிருந்து தப்ப முஸ்லிமாகுவதே தீர்வு என தீர்மானித்தேன்" மௌலானா இரண்டு நாட்கள் பயணத்தில் செல்லவிருப்பதை அறிந்து நானும் உடன் வருகிறேன் என்றேன். அவர்களும் சம்மதித்தார்கள். டில்லி, ஹரியானா, கூர்ஜா ஆகிய இடங்கள் சென்று ‘புலத்’ வந்தோம் இதற்கிடையில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள நான் தயாராகிவிட்டேன்.


இந்த எனது எண்ணத்தை சகோதரர் உமரிடம் கூறிய போது அவரும் சந்தோஷப்பட்டு மௌலானவிடம் தெரிவித்தார். "அல்ஹம்துலில்லாஹ்! ஜுன் 25, 1993 அன்று லுஹர் தொழுகைக்குப்பின் புனித இஸ்லாத்தை தழுவினேன். மௌலானா எனக்கு முஹம்மது ஆமிர் என்று பெயரிட்டார்கள்.


தொழுகை மற்றும் அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ள என்னை புலத்தில் தங்கியிருக்க மௌலானா ஆலோசனை அளித்தார்கள் எனது மனைவியும், சிறு குழந்தையும் தனியாக இருப்பதை கூறியபோது எனக்காக ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்தார்கள். நான் சில மாதங்கள் புலத்தில் குடும்பத்துடன் தங்கி எனது மனைவிக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னேன். அல்ஹம்துலில்லாஹ்! மூன்று மாதத்தில் என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.


கேள்வி: உங்களது தாய் உங்கள் மீது வருத்தத்தில் இருந்ததால் நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியதைப் பற்றி என்ன கூறினார்?


பதில்: நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை கூறிய போது மிகவும் சந்தோஷமடைந்து இப்போது தான் உன் தந்தையின் ஆத்மா சாந்தியடையும் என்று கூறினார். அதே வருடம் என் தாயாரும் இறைவன் அருளால் முஸ்லிமாகிவிட்டார். கேள்வி: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?பதில்: "அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை இடித்ததற்கு பகரமாக பாழடைந்த மஸ்ஜிதுகளை நான் புதுப்பிக்க வேண்டும்.


சகோதரர் உமர் புதுப்பள்ளிகளை உருவாக்க வேண்டும்" என்று நாங்கள் இருவரும் உறுதி எடுத்துக் கொண்டோம். மேலும் இப்பணியில் ஒருவருக் கொருவர் துணையாக இருந்து வாழ்நாளில் மஸ்ஜிதுகளை உருவாக்கவும், 100 மஸ்ஜிதுகளை புதுப்பிக்கவும் இலக்கு நிர்ணயித்தோம்.அல்ஹம்துலில்லாஹ்!


டிசம்பர் 6-2004க்குள்- இந்தப்பாவி ஹரியானா, பஞ்சாப், டில்லி, மீரட், கேன்ட் ஆகிய இடங்களில் பாழடைந்த அபகரிக்கப்பட்ட 13 மஸ்ஜித்களை புனர் நிர்மாணம் செய்துள்ளேன். சகோதரர் உமர் என்னையும் விஞ்சி 20 மஸ்ஜித்களை கட்டி முடித்து 21வது மஸ்ஜிதுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்." ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று நான் பாழடைந்த ஒரு மஸ்ஜிதில் தொழுகையை ஆரம்பிக்க வேண்டும்.


சகோதரர் உமர் புதுப்பள்ளிக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்! எந்த வருடமும் எங்களுக்கு தவறவில்லை. எனினும் 100 என்ற இலக்கு தூரமாகவே உள்ளது. இவ்வாண்டு 8 பள்ளிகள் பற்றி பேச்சுவார்த்தை நடக்கிறது.. சில மாதங்களில் அங்கும் தொழுகை ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.சகோதரர் உமர் என்னைவிட ஆரம்பத்திலிருந்தே முன்னிலையில் உள்ளார் எனது பங்கும் அவருக்குரியதே என்று தான் சொல்ல வேண்டும்.


ஏனெனில் என்னை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததே அவர்தான்.தற்சமயம் நான் ‘ஜுனியர் ஹைஸ்கூல்’ நடத்தி வருகிறேன். இஸ்லாமிய போதனைகளுடன் ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளது.


கேள்வி: நீங்கள் முஸ்லிமான பிறகு உங்களது தாயார் முஸ்லிமாகிவிட்டார்கள் சரி. உங்கள் குடும்பத்தில் வேறு யாரும் இஸ்லாத்தை ஏற்றுள்ளார்களா?


பதில்: எனது மூத்த சகோதரரின் மனைவி நான்கு வருடங்களுக்கு முன் மரணித்துவிட்டார். நான்கு சின்னஞ்சிறு குழந்தைகள் அவரக்குண்டு. அதில் ஒரு குழந்தை ஊனம். எனக்கு பிறகே அண்ணணுக்கு திருமணம் நடந்தது. எனது அண்ணி சிறந்த பெண்ணாகவும் முன்மாதிரி மனைவியாகவும் நடந்து கொண்டதினால் அவரது மரணத்தால் எனது அண்ணன் மிகவும் பாதிக்கப்பட்டார்.


அவரது பிள்ளைகளை என் மனைவியே பராமரித்து வந்தார். என் மனைவியின் இச்சேவையினால் எனது அண்ணன் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். நான் அவருக்கு இஸ்லாமிய அழைப்பு விடுத்தேன் என் தந்தையின் மரணத்திற்கு நான் காரணமாக இருந்ததால் அவர் என்னை நல்ல மனிதராகவே கருதவில்லை.


ஸஹாபாக்கள் செய்தது போன்ற தியாகம்நான் என் மனைவியிடம் "நம் பிள்ளைகள் பெரிய பிள்ளைகள் என் சகோதரர் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார். எனவே நான் உன்னை விவாகரத்து செய்து நீ இத்தா காலம் முடிந்தபின் என் சகோதரர் முஸ்லிமாக தயாராகிவிட்டால் அவரை நீ திருமணம் செய்துகொள். இது இருவரின் வெற்றிக்கும் வழிகோலாகும் என்றேன்".


ஆரம்பத்தில் சம்மதிக்காத எனது மனைவி விளக்கிக் கூறியவுடன் ஏற்றுக்கொண்டார். எனது அண்ணனிடமும் நீங்கள் முஸ்லிமாகி குழந்தைகளின் வாழ்க்கைக்காக எனது மனைவியை திருமணம் செய்து கொள்ளுங்கள். அவள் தன் பிள்ளைகளைப் போன்று உங்கள் பிள்ளைகளை கவனித்துக் கொள்வாள் என்றேன் ஊராரை பயந்து தயங்கிய என் சகோதரரும் பிறகு சம்மதித்தார்.


பிறகு என் மனைவியை தலாக் கூறிவிட்டேன்.. இத்தா கழிந்த பிறகு என் சகோதரருக்கு கலிமா சொல்லிக்கொடுத்து அவருடன் திருமணமும் செய்து வைத்தேன். அல்ஹம்துலில்லாஹ்! அவர் இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். எனது குழந்தையும் அவருடனேயே வசிக்கிறது..மௌலானா அவர்களின் ஆலோசனைப்படி புதிதாக இஸ்லாத்தை ஏற்ற வயதான ஒரு பெண்ணை நான் திருமணம் செய்து அல்ஹம்துலில்லாஹ்! சந்தோஷமாக வாழந்து வருகிறோம். (சுப்ஹானல்லாஹ்! ஈமானில் உறுதியிருந்தால் இன்றும் ஸஹாபாக்களின் மலைக்க வைக்கும் தியாகங்களை மீண்டும் பிரதிபலிக்க முடியும் என்பதை முஹம்மது ஆமிர் உணர்த்தி விட்டார்.)


கேள்வி : நீங்கள் முஸ்லிம் சகோதரர்களுக்கு கூற விரும்புவதென்ன?


பதில் : 1. முஸ்லிம்கள் தமது வாழ்வின் இலட்சியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.


2. இஸ்லாத்தை மனிதகுலத்திற்காக நம்மிடம் ஒப்படைக்கபட்ட அடைக்கலப்பொருளாகக் கருதி அதை முழு மனித சமுதாயத்திற்கும் சேர்த்து வைக்கவேண்டும்.


3. ஒரு சில இஸ்லாமிய விரோதிகளை பார்த்து மற்ற மக்களையும் அவ்வாறு எடை போடாதீர்கள். அவர்களிடம் பழிவாங்கும் எண்ணத்தை மேற்கொள்ளாதீர்கள்..


4. பாபர் மஸ்ஜித் இடிப்பில் கலந்து கொண்ட சிவசேனா, பஜ்ரங்தள் மற்றுமுள்ள ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம்கள் யார்? குர்ஆன் என்பது என்ன? மஸ்ஜித்தின் மகத்துவம் என்ன? போன்ற விபரங்கள் உண்மையான முறையில் தெரிந்திருக்குமேயானால் நிலைமையே வேறு ஒவ்வொரு ஹிந்து சகோதரரும் பள்ளியை கட்டும் எண்ணம் கொண்டிருப்பார். பள்ளியை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லாது போயிருக்கும் இது அனுபவப்பூர்வமான உண்மை.


5. பால் தாக்கரே, வினய் கட்டியார், உமா பாரதி, அசோக்சிங் கால் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை நிலை தெரிந்திருக்குமேயானால் நிச்சயமாக அத்தலைவர்களில் ஒவ்வொருவரும் தமது சொந்தப்பணத்தில் பாபர் மஸ்ஜிதை நிர்மாணிப்பதை தங்கள் வாழ்க்கையில் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் பேறாக கருதியிருப்பர்.


6. நாட்டில் முஸ்லிம் விரோதிகளாக வலம் வருபவர்கள் 100கோடி ஹிந்துக்களில் ஒரு இலட்சம் கூட இருக்க மாட்டார்கள். ஒரு இலட்சம் என்பதே அதிகம் தான் 99 கோடியே 99 இலட்சம் மக்கள் என் தந்தையைப் போன்று மனிதநேய நண்பர்களாக, இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளை உளமாற நேசிப்பவர்களாகவே இருக்கின்றனர்.என் தந்தை (ஃபித்ரத்) படைப்பால் முஸ்லிமாக இருக்க வில்லையா?


முஸ்லிம்கள் அவருக்கு தீனை எடுத்துரைக்காததினால் நிராகரிப்பிலேயே இறந்துவிட்டார். இது என் மீதும் என் தந்தை மீதும் முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் அநீதியல்லவா?பாபர் மஸ்ஜிதை இடித்த என்னைவிட அநியாயக்காரர்கள் யாருமிருக்க முடியாது என்பது மறுக்கவியலாத உண்மை. ஆனால் என்னைவிட கொடுமைக்காரர்கள் யார் தெரியுமா? முஸ்லிம்கள்தான் அழைப்புப்பணியில் அவர்களின் அலட்சியம் பொடுபோக்கு என் பிரியமான தந்தையை நரகிற்கு தள்ளிவிட்டது.


7. மௌலானா கலீம் சித்தீகி அவர்கள் "இஸ்லாம் முஸ்லிம்கள் பற்றி அறியாத காரணத்தினால் தான் பாபர் மஸ்ஜிதை இடித்துள்ளனர்’ என்று கூறியது முற்றிலும் உண்மை. ஆம்! நாங்கள் அறியாமையால் தான் இந்த அநியாயத்தை கையாண்டோம். ஆனால் முஸ்லிம்கள் அறிந்து கொண்டே அம்மக்கள் நரகம் செல்ல காரணிகளாக இருக்கின்றனர்.


என் தந்தை நிராகரிப்பில் மரணித்துவிட்டார் என்ற எண்ணம் இரவில் ஏற்பட்டுவிட்டால் என் தூக்கம் பறந்துவிடும் வாரக்கணக்கில் தூக்கம் வராது தூக்க மாத்திரை சாப்பிடும் நிலைக்கு தள்ளப்படுவேன்.இந்த வேதனையை, வலியை முஸ்லிம்கள் உணர வேண்டுமே!


Monday, January 26, 2009

உண்மையான தேசத் தலைவர்!




கலிஃபா உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது குடிமக்கள் நிலையை அறிவதற்காக நகர்வலம் செல்லும் வழக்கம் உடையவர்கள். அப்போது மதினா நகரெங்கும் பஞ்சம் நிலவி வந்தது. நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட அனனவருக்கும் கிடைத்திட வேண்டும் என்பதில் உமர் (ரலி) அவர்கள் மிகுந்த கவனம் செலுத்தினார்கள்.



ஒருநாள் இரவு நேரத்தில் கலிஃபா அவர்கள் தமது உதவியாளர் அஸ்லம் என்பாருடன் மதினாவின் புறநகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குடிசையிலிருந்து விளக்கு வெளிச்சமும் குழந்தைகளின் அழுகுரலும் வரக் கண்டார்கள்.கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள்.


கலிஃபா உமர் (ரலி) அவர்கள், அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று அவருக்கருகில் சென்றார்கள். அந்தப் பெண்மணி உமர் (ரலி) அவர்களை பார்த்ததில்லை என்பதால் வந்திருப்பவர் கலிஃபா என்பதை அறியவில்லை.உமர் (ரலி): “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”உமர் (ரலி): “அடுப்பில் என்ன இருக்கிறது?”பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத கலிஃபா உமர் அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா உமர் (ரலி) அவர்களின் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை உமர் எப்படி அறிவார்?” என்று வினவினார்..“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் உமர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா உமர் (ரலி) அவர்கள் விரைந்து நகருக்குத் திரும்பி உடனே பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும் எடுத்து வைத்தார்கள். கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள். சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

அவர்களின் உதவியாளர் அஸ்லம் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். உமர் (ரலி) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. “என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான்தானே? அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”அஸ்லம் மிகவும் தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார்.

அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் உமர் (ரலி) அவர்கள். அஸ்லமும் அவர்களை பின்தொடர்ந்து சென்றார்.குடிசையை அடைந்த உமர் (ரலி) அவர்கள் மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்... அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள்.

அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படிந்தது.சிறிது நேரத்திற்குப் பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த உமர் (ரலி) அவர்களின் முகமும் மலர்ந்தது.

உமர் (ரலி) அவர்கள் அப்பெண்மணியிடம் ‘அக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவினார்கள். அந்தக் குழந்தைகளின் தந்தை இறந்து விட்டதாகவும் அவர்களுக்கு ஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு உமரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா உமர் (ரலி) அவர்கள்தாம் என்பதை அம்மாது இன்னும் அறிந்து கொள்ளவில்லை!உமர் (ரலி) அவர்களும் ‘தாம் இன்னார்’ என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “நீர் கலிஃபாவை சந்திக்கும்போது அங்கே என்னை கண்டு கொள்வீர்” என்றார்கள்.

கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள் அதன் பின்னர் மதினா திரும்பினார்கள். செல்லும் வழியில் தன் உதவியாளரிடம் சொன்னார்கள், “அஸ்லம், நான் ஏன் அங்கே அமர்ந்திருந்தேன் தெரியுமா? அக்குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்ததை பார்த்த நான் அவர்கள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடுவதையும் சிறிது நேரம் பார்க்க விரும்பினேன்.

அதனால்தான்.”வீரத்திற்குப் பெயர் பெற்ற உமர் (ரலி) அவர்கள், கருணையுள்ளம் உடையவராகவும் குடிமக்கள் மேல் அக்கறை கொண்ட பொறுப்பான தேசத் தலைவராகவும் விளங்கினார்கள்.


Saturday, January 24, 2009

வேலையே நீ முஸ்லிம்க‌ளின் எட்டாக்கனியா?


( டாக்டர் ஏ.பீ.முகம்மது அலி,பி.எச்.டி, ஐ.பி.எ°(ஓ)

தேசீய வேலைவாய்ப்பு நிறுவன ஆய்வின்(என்.எ°.எ°.ஓ) 2000-2005 ஆண்டுக்கான அறிக்கையின்படி பட்டப்படிப்பு பெற்ற 15 சதவீதம் மு°லிம் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி மிகு தகவலை அளித்துள்ளது. ஆனால் இந்து பட்டதாரிகள் 7 சதவீதம்த்hன் வேலை கிடைக்காமல் உள்ளனர். இன்னொரு அறிக்கையில் ஒரு மதத்தினர் மற்ற மதத்தினருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற தகவலையும் கூறுகிறது.



அதே போன்று மேல்நிலை பள்ளி கல்விக் கற்ற 48 சதவீதம் இந்துக்கள் வேலையில் உள்ளனர். ஆனால் மு°லிம் 10 சதவீதம் தான் என்பது அதிர்ச்சியாக உள்ளது. மாண்புமிகு பிரதமர் 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் பேசுகையில் மு°லிம்களுக்கு பொதுத்துறையில் இருப்பது போல் தனியார் பெரிய தொழிற்துறையிலும் மு°லிம்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

2009 வருடம் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தனியார் தொழில் அதிபர்கள் ரிலையன்° அனில் அம்பானியும், இரும்பு ஆலை அதிபர் சுனில் மிட்டலும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி இந்திய நாட்டுன் பிரதமராக வந்தால் நலமாக இருக்கும் என்று கூறியதாக பத்திரிக்கை செய்தி. எந்த மோடியை? அப்பாவி 2000 மு°லிம்களுக்கு மேல் மனித கொலையினை நடத்தியும், பல்லாயிரக்கணக்கான மு°லிம்கள் அகதி முகாமிலிருந்து தங்கள்வீடுகளுக்கு திரும்ப முடியாமல் செய்யும் குஜராத் அரசினை தலைமை ஏற்று நடத்தும் மோடியைத்தான் சொல்கின்றனர்.பின் எவ்வாறு அனில் அம்பானியும், சுனில் மிட்டலும் பிரதமர் சொல்வது போன்று மு°லிம்களுக்கு வேலை கொடுப்பார்கன்.

ஏன், அரசாங்கத்தால் நடத்தப்படும் வேலைகளிலேயே அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட 15 கொள்கை அறிக்கையின்படி மு°லிம்களுக்கு வேலை பூரணமாக கொடுக்கவில்லையென்று மைனாரிட்டி அமைச்சர் ஏ.ஆர். அந்துலே சொன்னதாகவும், ஒரு மத்திய அமைச்சருக்கு உள்ள ஒரு அமைச்சகம் கூட இல்லை என்று பத்திரிக்கை செய்திகளை படிக்கும் போது பரிதாபமாக நமக்குத்தெரியவில்லையா?

மு°லிம்களின் நிலைப்பாடு குறித்து அமைக்கப்பட்டநீதிபதி சச்சார் குழு தன் அறிக்கை தயாரிக்க ராணுவத்தில் மு°லிம்களின் வேலை பற்றி கேட்டதிற்கு இந்துத்துவா அரசியல் வாதிகள் மட்டும் எதிர்க்கவில்லை- மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ராணுவ அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றால் ஆச்சரியமில்லையா? மேலும் சச்சார் அறிக்கையில் மு°லிகள் கல்வியிலோ, வேலையிலோ ஆதி திராவிடர்களை விட மிகவும் பின் தங்கி உள்ளனர், பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மு°லிம்கள் அதிகமாக சிறைக்கோட்டங்களின் கம்பிகளை எண்ணிக்கொண்டுள்ளனர்.

முன்னாள் உச்சமன்ற நீதிபதி ஜே,எ°. வர்மாமு°லிம்கள் நீதித்துறையில் கண்ணுக்குத் தெரியாவிடத்தில் உள்ளனர் என்று கூறுகிறார்.
இந்துத்துவா ஆட்சி செய்கின்ற மாநிலத்தில் மு°லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றால் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது, ஆனால்பொதுவுடைமை பூங்கா கம்யூனி°டுகள் 30 வருடம் ஆட்சி செய்யும் மு°லிம் ஜனத்தொகை 25 சதவீதம், ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 4.2 சதவீதம் தான் என்றால் நம்ப முடிகிறதா? பீகார், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெறும் 3 சதவீதம் தான்.

தமிழ்நாட்டில் மு°லிம் ஜனத்தொகை 6 சதவீதம் இருந்தும், அரசால் 3.5 சதவீதம் வேலை வாய்ப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. அதையாவது முழுமையாகக்கொடுத்தால் சரிதான். இரண்டரை ஆண்டு காலத்தில்(25.12.2009) மொத்தமாக 2,78,294 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிக்கை கூறுகிறது. அதில் எத்தனை சதவீதம் மு°லிம்கள் என்று அரசை ஆதரிக்கும் மு°லிம் அமைப்புக்கள் கேட்டுப்பெற வேண்டும். மேற்கூறிய தகவல் முலம் எங்கே படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பே இல்லாத இருண்ட உலகம் உள்ளதோ என்ற ஐயப்பாடு ஏற்படலாம். உலகம் விசாலமானது.

நீங்கள் திறமை சாலியாக இருந்தால் உலகம்உங்கள் காலடியில்.படித்த றிமைசாலிகளை உருவாக்குவது யார் கையில் எள்ளது? பெற்றோர்களின் எதவி, ஆசிரியர்களின் ஊக்கம், மாணவர்கள் தன்னம்பிக்கையிலும்தான் எள்ளது. எல்லோரும் பட்டம் பெற்று வீடலாம், ஆனால் அந்த பட்டங்கள் நாட்டுக்கும், வீட்டுக்கும்உதவும் வேலை வாய்ப்பு தேடித்தருகின்றதாக இருக்கின்றதா என்று பார்ரக்க வேண்டும். அப்படிப்பட்ட பாடங்களை பள்ளியிலும், கல்லூரியிலும் ஆசிரியர்களை போதிக்கச்செய்வது கல்வி °தாபனங்களை நிர்வகிப்பவர்களைச்சாரும்.

கல்வி நிலயங்களை நிர்வகிக்கிறவர்கள் குறைந்தபட்ச படிப்பு பெற்றிருந்தால் தானே அதைப்பற்றி சிந்திக்க முடியும். ஒரு சமயத்தில் இந்தக் கருத்தினை வழியுறுத்தும் போது ஒருவர் கேட்டார் ஏன் படிக்காதவர்கள் டாக்டர் பட்டம் பெறவில்லையா என்று. படிக்காதவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் பட்டம் கௌரவ பட்டம் என்று அறியாதவர்களும் நம்மிடையே கல்வி °தாபனங்களை நிர்வாகிர்க்கிறவர்களின் அறியாமையைத்தான் காட்டுகின்றது.

பல்கலைக்கழக(யு.ஜி.சி) அறிவித்த கொள்கைபடி அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளிலும் தரமான கல்வியைத் தந்தால் தான் தரச்சான்றிதழ் தரமுடியும் என்றும், கல்லூரிகளில் விரிவுரையாளர்களுக்கு டாக்டர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறுகிறது.யு.ஜி.சி தலைவர் திரு. சுக்தேவ் தோரட் கூற்றின்படி 24 சதவீத கல்லூரிகளும், 30 சதவீத பல்கலைக் கழகங்களும் மட்டுமே தர(நாக்)அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது ஆச்சரியமாயிருக்கிறதா, ஆனால் அதுதான் உண்மை.

சமீபத்தில் எனது பள்ளித் தோழர் தன்னுடைய எம்.பி.ஏ படித்த மகனை அழைத்துக்கொண்டு வந்து வேலைக்கு சிபாரிசு செய்யச் சொன்னார். நானும் வெ°ட்ஆசியா மனிதவள மேலாளர்திரு. ஜாபர் அவர்களிடம் சிபாரிசு செய்தேன். அவர் என் நண்பரின் மகனிடம் பி.சி.ஏ சம்பந்தமான கேள்யினை கேட்டபோது தெரியாதுஎன்று சொல்லியுள்ளார்.மேலாளர் கேட்ட ஒரு கேள்விக்குக் கூட ஆங்கிலத்தில் பதில் சொல்ல முடியவில்லையாம்.பின்பு என் நண்பனின் மகன் என்னிடம் காரணம் சொல்லும் போது எல்லாம் மறந்து விட்டது என்றார்.


போட்டிகள் நிறைந்த உலகில் யார்எதிர் நீச்சல் போடுகிறாரோ அவர்தான் வெற்றிபெற முடியும். ஒரு தகுதியான மாணவனை உருவாக்குவது ஆசிரியரின் கடமையாகும்.போதிக்கும் கல்வி ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது மனதில் புதிய உத்வேகம், கண்டுபிடிப்பு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமை, தொழில் ஙட்பம், நிர்வாகத்திறமை, மனதைரியம் ஆகியவற்றை கற்றுத்தறுவதாக இருக்க வேண்டும்.

மதுரையைச்சார்ந்த 7வயது சிறுமி சுபிக்சா கம்யூட்டரில் புதிய உக்தியை கையாண்டதிற்காக உலகம் மெச்சத்தகுந்த பரிசினை பெற்று ஜனவரி ஒன்பதாம் தேதி 2009 ஜனாதிபதி சென்னை வந்தபோது நேரில் அழைத்துப் பாராட்டினார். நாகர்கோவில் இ°லாமிய மாணவி ரயிலில் கழிவுகளை தானியங்கி மூலம் கொட்டும் கருவியினை கண்டுபிடித்து பாராட்டுப் பெற்றார், அதே போன்று நாகப்பட்டிணம் இ°மாயில் என்ற மாணவர் சென்னை சத்யபாமா பல்கலைகழகத்தில் 4ம் ஆண்டு இ.சி.இ இன்ஜினிரிங் படிப்பில் செல்போன், டிவி, ரோடியோ ஆண்டனாக்களை இணைக்கும் தொலைதொடர்பில் புதிய கருவி மைக்ரோ °டிரிப் பேட்ச் ஆண்டனாவினை கண்டு பிடித்துள்ளார்.

நான் குறிப்பிட்ட மூவர் சாதனை பின்னணியில் அவர்களுடைய ஆசிரியர்களும், பெற்றோர்கள் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். ஏன் நீங்களும்உங்கள் குழந்தைகளை அவர்கள்போல் உருவாக்கக்கூடாது? கிராமப்புறசூழ் நிலையில் அமைந்துள்ள மு°லிம் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் போதிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

முதுகலை பட்டங்களை பெற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூட ஆங்கிலத்தில் பேச வரவில்லை என்றால் வாய்ப்பு கதவு மூடப்படும் என்பதினை மாணவர்களுக்கு எடுத்து உரைக்க வேண்டும். நான் பள்ளியில் என்.சி.சி சார்ஜன்ட்டாக பணியாற்றியபோது கமாண்டிங் வார்த்தைகள் ஹிந்தியில் இருந்தது. ஆனால் ஹிந்தியை கற்றுக்கொள்ளாது 11 வது பரீட்சையில்ஹிந்தி வினாத்தாளையே பதிலாக எழுதி, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு பின்பு ஹிந்தி ஏன் படிக்கவில்லை என்று நான் 1982ம் வருடம் மதுரை தல்லாகுலம் டி.எ°.பியாக இருந்தபோது ராஜ°தான் மாநிலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு பயிற்சிக்காக மவுண்ட் அபுவிற்கு சென்றபோதுதான் உணர்ந்தேன்.

ஹிந்தி தெரியவில்லை என்றால் நாம் வட நாடுகளில் மட்டுமல்ல பக்கத்திலுள்ள ஆந்திர மாநிலத்திலும், பிழைக்கப் போகும் வளைகுடா,அரபு நாடுகளிலும்தான்.பின்பு ஹிந்தியின் முக்கியத்தை உணர்ந்து 1988ம் வருடம் தர்மபுரியில் எ°.பி யாக இருந்தபோது ஹிந்தி பிராத்மிக் பரீட்சை எழுதி வெற்றி பெற்றேன். அப்போது என் வயது 42. ஆகவே ஒரு மு°லிம் மாணவன் தமிழ் மொழியோடு ஆங்கில, ஹிந்தி மொழியையும் தெரிந்திருப்பதின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்றால் மறுக்க முடியாது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆ°திரேலியா போன்ற நாடுகளுக்கு மேற்படிக்காக ஆங்கில அறிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆகவேதான் ஜி,ஆர்.இ, டோப்பல், ஐ.இ.எல்.டி.எ° போன்ற பரீட்சைகள் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிப்பதோடு'புல்பிரைட்' போன்ற °காலர்சிப்களும் வழங்கப்படுகிறது. அதேபோன்று இந்தியாவில் புதுடெல்லியில் இயங்கும் மவுலானா அப்துல் கலாம் ஆஜாத் அரக்கட்டளை பெண்கள் கல்வி கற்பதை ஊக்கப்படுத்த °காலர்சிப்பும், சென்னையில் சீதக்காதி டிர°டிலும், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக் பொறுப்பேற்றிருக்கும் 'ஓமியட்' அறக்கட்டளையும், யு.ஜி.சி. கிராண்ட் கமிசன் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் முதுகலை பட்டப்படிப்பை தொடர்வதற்காக மாதம் தோறும் மானியமாக ரூ.2000 வழங்கப்படுகிறது.

தமிழக அரசு கல்விக்காகஇலவச சைக்கிள், பள்ளிவரை இலவச படிப்பு , இலவச கம்யூட்டர் போன்ற சலுகைகலையும் பள்ளி கல்விக்காக அறிவித்த வாய்ப்பை மு°லிம் மாணவர்கள் தவற விடலாமா? சமீபத்தில் 8வது முதல் 12வது படிக்கும் இந்து மாணவர்களுக்கு 'இந்து °காலர்சிப் எபிசியன்சி டெ°ட்' நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் சேறுவதிற்கான ஊக்க உதவித்தொகையினை இப்போதே வழங்குகிறார்கள். ஏன் நம்மால் முடியாதா?

வசதி படைத்த மு°லிம் தன்வந்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடுக்கும் சக்காத், சதக்கா போன்ற தான தர்மங்களின் ஒரு பகுதியை தங்கள் பகுதியில்உள்ள கல்வி நிறுவனங்களில் பயிலும் மு°லிம் மாணவர்கள் பயன்பெற அறக்கட்டளையும், மானியங்களையும் வழங்கி ஊக்கப்படுத்தலாம். சிறிய ஊர்களில் பெரிய ஆடம்பரமான பள்ளிவாசல்கள் கட்டும் போது பொதுஅறிவை விரிவுபடுத்தும் படிப்பகங்கள் ஏற்படுத்தலாம்.

நான் புதுக்கல்லூரியிலும், மாநிலக்கல்லூர்யிலும் பயிலும் போதுஎங்கள் ஊர் இளையான்குடியில் ஐக்கிய மு°லிம் படிப்பகம் இருந்ததால் ஹிந்து ஆங்கிலப்பத்திரிக்கை, இல்ல°ட்ரேட் வீக்கிலி ஆப் இந்தியா, ரீடர்° டைஜ°ட் போன்ற பத்திரிக்கை களில் வரும் பொது அறிவு விசயங்கள் பிற்காலத்தில் எனக்கு அரசு தேர்வுகள் எழுத உதவியாக இருந்தது. அதே போன்ற படிப்பகங்கள் தங்கள் பகுதியில் நிறுவலாம்.

ஹிந்துக்கள் வீடுகள் கட்டும் போது தனியாக பூஜை அறை ஒன்றை ஏற்படுத்துவார்கள். நாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படிப்பறை கட்டி அதில் கனிணி, இன்டர்நெட் வசதி செய்து கொடுப்பதின் மூலம் உலகில் ஒருமூலையில் உள்ள லைப்பரியில் தேவைப்படும் புத்தகங்களைவீட்டில் இருந்தே படித்து தெரிந்து கொள்வதோடு, ஆன்லைன் வர்த்தகம், வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடலும் செய்ய ஏதுவாக இருக்கும்.

பள்ளி இறுதிப்படிப்பினை முடித்ததுமே மாணவர்களை வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிந்து வைக்கச்சொல்லவதின் மூலம் மேல்படிப்பினை தொடர முடியாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பினை ஏற்படுத்தலாம். கல்லூரிகளிலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவக்கூடிய பாடங்களை புகுத்தலாம். பட்டப்படிப்பு படித்த மாணவர்கள் எம்.பி.ஏ படிக்க உதவும் ஜிமேட்,கேட், பிட், ஜிஇஇ, சேட் போன்ற படிப்புகளுக்கு கோச்சிங் கொடுக்கலாம்.

ஒவ்வொரு பள்ளி, கல்லூரியிலும் 'கேரியர் கைடன்°' அமைப்பை ஏற்படுத்தி இது போன்ற பயிற்சிகளை ஆசிரியர்கள் கொண்டே செயல்படச்செய்யலாம். சென்னை ஜார்ஜ் டவுண் என்வீட்டிலிருந்து கோட்டைவரை நடைபயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு நாள் ஒரு இளைஞர் என்னை வழி மறித்து 'சார் நான் ஐ.ஏ.எ° படிக்க வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றார். நான் அவரிடம் நீ என்ன செய்கிறாய் என்றேன், அதற்கு அவர் பிள°2 படிக்கிறேன் என்றார். அந்த பையனின் கேள்வி என்னை 40 வருட சம்பவத்திற்கு கொண்டு சென்றது.

நான் சென்னை புதுக்கல்லூரியில் படிக்கும்போது 1968 வருடம் ஒரு நாள் என் நண்பர் தாகிருடன் ராயப்பேட்டை காவல் நிலைய அருகில் இருந்த ஐயர் ஐ,ஏ,எ° அகடாமியில் சென்டரில் விசாரித்தபோது அங்கே இருந்த மேலாளர் சொன்னார் நீங்கள்முதுகலை பட்டப்படிப்பை முடித்துவிட்டு வாருங்கள் அதன்பின் பார்க்கலாம் என்று அனுப்பிவிட்டார்.

ஆனால் உண்மையில் ஐ.ஏ.எ° படிக்க முதுகலை பட்டம்பெற தேவையில்லை என்பது பின்புதான் தெரிந்தது. என்னிடம் கேள்வி கேட்ட மாணவனை நிச்சயமாக பாராட்டவேண்டும், ஏனென்றால் நாங்கள் பட்டப்படிப்பில் கேட்டக் கேள்வியை பிள° 2 படிக்கும்போதே கேட்டிருக்கிறார். உண்மையில் இந்திய ஆட்சிப்பணிக்கோ அல்லது அதற்கு இணையான மாநில பரிட்சை எழுதுவதிற்கு ஆயத்தப்பணியை பிள°2 முடித்தவுடனேயே ஆரம்பித்துவிடவேண்டும். இளங்கலை பட்டப்படிப்பில் என்ன என்ன விருப்பப்பாடம் ஐ.ஏ.எ° பரீட்சைக்கு எடுக்கலாம் என்று தீர்மானிக்கலாம்.

இதன் மூலம் ஒரு மாணவன் 21லிருந்து 24 வயதுக்குள் இந்திய ஆட்சிப்பணி பரீச்சைக்கோ அல்லது அதற்கு இணையான பரீட்சையிலோ வெற்றி பெறலாம். 53000 ஊழியர்களைக் கொண்ட சத்தியம் நிறுவனமே ஊழியர்களை நட்டாற்றில் விட்டபோது அரசு ஊழியம் நிரந்தர வேலை வாய்ப்பும், பல்வேறு சலுகைகளையும் கொண்டது எவ்வளவோ மேல். நாடார் சமூகத்தினருக்கு சாதாரண காவலர்,கிளார்க் பதவியிலிருந்து ஐ,ஏ,எ° அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் வீரபாண்டிய பட்டிணம் ஆதித்தனார் கல்லூயில் குறைந்த சலுகையில் நடத்தப்படுகிறது.

அது போன்ற அமைப்பு நமக்கு சென்னையில் இல்லை. அதற்காக புதுக்கல்லூரியை நிர்வகித்து வரும்மியாசி அமைப்பில் கொண்டு வர வேண்டும் என்று ஒரு தீர்மானம் 15.10.2008 அன்று நான் கொண்டு வந்தபோது பதவியை மட்டும் அனுவிக்க வேண்டும் ஆனால் மு°லிம் மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடாது என்ற சிலரால் எதிர்க்கப்பட்டது என்றால் பாருங்களேன். சென்னை வண்டலூரில் ஐ.ஏ.எ°க்கு மட்டும் கிரசண்ட் பொறியல் கல்லூரியில் நடத்தப்படுகிறது.

அதேபோன்று முன்னாள் எம்.எல்,ஏ சைதை துரைசமியும் சைதைப்பேட்டியிலும், ஈ.வெ,ரா. அறக்கட்டளை சார்பிலும், அரசு சார்பில் அண்ணா நகரிலும் நடத்தப்படுகிறது.ஆனால் எம்.பி.ஏ, மட்டும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் படிப்பில் சேரவும், மேல் படிப்பிற்காக மேல் நாட்டிற்கு செல்லவும் தேவையான காம்ரகன்சிவ்(ஒருங்கிணைப்பு) பயிற்சி அளிக்க மு°லிம் அமைப்புகள் தற்போது இல்லாத குறையை நிவர்த்தி செய்ய கல்லூரிகளை நடத்துகின்றவர்கள் அல்லது தொண்டு நிறுவனம் முயல வேண்டும். சீன அறிஞர் நா°ட்டர்டாம் பல ஆண்டுகளுக்கு முன்பே 2020ம் வருடத்தில் சீனாவும், இந்தியாவும் வல்லரசாகும் என்று கூறியிருக்கிறார்.

இப்போதே சீனா 13 சதவீத வளர்ச்சியை எட்டிவிட்டது. இந்தியாவும் 11 சதவீத வளர்ச்சியை எட்டிவிட்டது. பொருளாதார வளர்ச்சியில் உலகமே அதிர்ந்திருக்கும் நிலையிலும் இந்திய பொருளாதாரம் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. ஆகவே பிரகாசமான எதிர்காலத்தில் நாம் மு°லிம் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டினால் வேலை இதயக்கனியாவது உறுதியே.