Friday, October 31, 2008

மன்மோகன்..அமெரிக்க மண்ணின் மோகனன்..!!

நேரு பாதையிலிருந்து விலகிய மன்மோகன்!


-பழ.நெடுமாறன்

1938ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஸ்பெயின் ஜனநாயகத்தை அழித்து சர்வாதிகார ஆட்சியை நிறுவியிருந்த பிராங்கோவைக் கண்டித்தும், சீனாவின் மீது படையெடுத்து ஜப்பானிய ராணுவம் செய்துவரும் அட்டூழியங்களைக் கண்டித்தும் அந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஸ்பானியப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான திருமதி வாபாசி லோனாரா என்பவரும் ஜவகர்லால் நேரு அவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஐரோப்பாவில் இட்லர், முசோலினி ஆகியோர் தலைமையில் பாசிசம் படர்ந்து கொண்டிருந்த வேளை. அவர்களைப் பின்பற்றி ஸ்பெயின் நாட்டிலும் பிராங்கோ பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவியதற்கு எதிராக ஜனநாயக உணர்வு படைத்தவர்கள் போராடினார்கள்.

ஐரோப்பா முழுவதுமிருந்த ஜனநாயகவாதிகள் இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் திரண்டார்கள். பிரிட்டனில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளத் தொண்டர்களாகத் தங்களைப் பதிவு செய்து கொண்டார்கள். ஜவகர்லால் நேருவின் வருங்கால மருமகனும் இந்திராவின் வருங்காலக் கணவருமான பெரோஸ் காந்தியும் அவர்களில் ஒருவராவார். ஸ்பெயின் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்காக நடைபெற்ற இப் போராட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஆதரவை அளிப்பதற்காக நேரு இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

பாரிசிலிலிருந்து வெளிவந்த ரூடி பிராவோ எனும் பத்திரிகைக்கு ஸ்பெயின் போராட்டம் பற்றி உணர்ச்சிகரமான ஒரு நேர்காணலை நேரு அளித்தார்.

ஸ்பெயின் நாட்டு எல்லைக்குச் சென்று அங்கு முகாமிட்டிருந்த போராட்ட வீரர்களை நேரில் சந்தித்து ஊக்குவித்தார்.

ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நவம்பர் 17ம் தேதி இந்தியா திரும்பிய நேருவுக்கு மும்பையில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உள் நாட்டுப்போரின் விளைவாக அம்மக்கள் உணவு, மருந்து இல்லாமல் படும் துயரம் குறித்து அக்கூட்டத்தில் நேரு உருக்க மாகப் பேசினார்.

அம்மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் மருந்துப் பொருள்களையும் திரட்டி அனுப்பி வைக்கும்படி மும்பை வணிகர்களை வேண்டிக்கொண்டார். அதற்கிணங்க உணவுப்பொருள்களும் மருந்துப் பொருள்களும் ஒரு கப்பல் நிறைய இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.

1939ம் ஆண்டு ஆகஸ்டு 20ஆம் தேதி சீனா சென்ற நேரு 13 நாட்கள் அங்கு சுற்றுப்பயணம் செய்தார். ஜப்பானியர் படையெடுப்பின் விளைவாக சீரழிந்து கிடந்த சீன மக்களின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டார். அங்கிருந்து திரும்பியவுடன் காங்கிரஸ் தலைவராக இருந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைச் சந்தித்து சீன மக்களின் துயரங்களை விளக்கினார். உடனடியாக காங்கிரஸ் சார்பில் மருத்துவ உதவிக்குழு ஒன்றினை அனுப்பி வைப்பதென முடிவு செய்யப்பட்டு டாக்டர் கோட்னீஸ் என்பவர் தலைமையில் குழு ஒன்றும் அனுப்பிவைக்கப்பட்டது.

இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலக்கட்டத்தில்கூட பாதிக்கப்பட்ட மக்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஓடோடிச் சென்று அவர்களுக்கு உதவுவதை அன்றைய காங்கிரஸ் கட்சி செய்தது. ஸ்பெயினுக்கும் சீனாவுக்கும் காங்கிரஸ் கட்சி செய்ய முன்வந்த மனித நேய உதவிகளை அன்றைய பிரிட்டிஷ் அரசே தடுக்கவில்லை.

ஆனால் இன்று என்ன நடக்கிறது? காங்கிரஸ் கட்சி பாரம்பரியத்திற்கு இழுக்கு நேரும் வகையில் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் சிங்கள இனவெறியரால் கொன்று குவிக்கப்படுவதைப் பார்த்தும் பாராமுகமாக இருக்கிறது. பசியும் பட்டினியுமாகக் கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டிய இந்தியா அவர்களை அழிப்பதற்கு சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும் ஆள் உதவியும் செய்கிறது. இந்திய ராணுவத்தின் துணை தலைமை தளபதியே இதை உறுதி செய்திருக்கிறார்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரில் சிங்களப் படைக்கு உதவியாக இந்தியப் படைவீரர்கள் யாரும் அங்கு செல்லவில்லை என இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியான மிலன் லலித் குமார் கூறியுள்ளார்.

மண்டபத்தில் இந்து செய்தியாளருக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:

இலங்கைக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் அவ்வப்போது செல்கிறார்கள். சிங்கள ராணுவத்திற்கு ஆலோசனைகள் வழங்கிவிட்டு திரும்பி விடுகிறார்கள். இலங்கையில் ராடார் சாதனங்களை இயக்கிய இரண்டு இந்திய ராணுவ தொழில்நுட்ப வல்லுநர்கள் புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. காயமடைந்தவர்கள் ஒருவேளை சிவிலியன்களாக இருக்கக்கூடும் என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியாக இருக்கும் ஒருவருக்கு இந்திய அரசியல் சட்டம் குறித்தும் உலக நாடுகளின் சட்டங்கள் குறித்தும் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

வெளிநாடொன்றில் நடைபெறும் போரில் இந்தியாவின் குடிமக்கள் கலந்து கொள்ளவேண்டும் என்று சொன்னால் அதற்கான அனுமதியை இந்திய அரசிடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் அவர்கள் சென்றிருப்பார்களேயானால் இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ராடார் சாதனங்களை இயக்கியவர்கள் இந்திய ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் சிவிலியன்கள். அவர்களாகவே சென்றிருக்கிறார்கள் என்பது உண்மையானால் இந்திய அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை என்பதும் உண்மையானால் அதே உரிமை தமிழர்களுக்கும் உண்டு.

இலங்கையில் கொன்று குவிக்கப் படும் தமிழர்களைப் பாதுகாக்க, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் செல்வதையும் இந்திய அரசு தடுக்க முடியாது. இந்திய ராணுவத்தின் துணைத் தலைமை தளபதியின் கூற்று இதற்குத் தான் தமிழர்களைத் தூண்டுகிறது.

கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கையில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். சுமார் பத்து லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியின்றி இந்தியா உள்பட உலக நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர்.

ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்து உண்ண உணவோ உறைவிட வசதிகளோ இல்லாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ தமிழ்நாட்டு மக்கள் திரட்டிய உணவு மருந்துப் பொருள்களை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்க அனுமதி தரக்கூட இந்திய அரசு மறுக்கிறது. தமிழக அரசும் வாய்மூடி மெளனம் சாதிக்கிறது.

இந்தியாவிலுள்ள வேறு எந்த மொழி பேசும் தேசிய இனமும் இப்படியொரு அவலநிலையை இதுவரை சந்தித்தது இல்லை. வங்காளி, பஞ்சாபி, குஜராத்தி, மராட்டி மற்றும் இந்தி மொழி பேசுகிற இனத்து மக்கள் வேறு எந்த நாட்டிலாவது வாழ்ந்து இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக நேர்ந்தால் அதைப் பார்த்துக்கொண்டு மேற்கண்ட மொழி பேசும் இன மக்கள் சும்மா இருந்திருப்பார்களா? இந்திய அரசுக்கு எதிராகக் கொதித்தெழுந்து போராடி இருப்பார்கள்.

சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு எந்த நாட்டுடனும் ராணுவ உடன்பாடு செய்து கொள்ள மறுத்தார். அமெரிக்க வல்லரசு, நேட்டோ, சீட்டோ என பல்வேறு நாடுகளை ராணுவ ரீதியான கூட்டு உடன்பாடு நாடுகளாக உருவாக்கி சோவியத்து ஒன்றியத்திற்கு எதிராக அணி திரட்டியது. அதைப்போல சோவியத் ஒன்றியமும் தங்களின் தற்காப்புக்காக வார்சா உடன்பாடு நாடுகளின் அணியை உருவாக்கிற்று.

ஆனால் நேரு இந்த ராணுவ கூட்டுக்களைக் கண்டித்தார். அது மட்டுமல்ல புதிதாக விடுதலை பெற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஒன்றிணைத்து அணிசேரா நாடுகளின் குழு ஒன்றினை உருவாக்கினார். அவருடைய இந்த தொலைநோக்குப் பார்வையின் விளைவாக மூன்றாம் உலகப் போர் மூளுவது தடுக்கப்பட்டது.

ஆனால் நேருவின் வழி வந்ததாகத் தன்னைக் கூறிக்கொள்ளும் மன்மோகன் சிங் அரசு இலங்கையில் தமிழர்களை இனப் படுகொலைக்கு உள்ளாக்கி வரும் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளித் தருகிறது.

அன்பு நெறியைப் போதித்த மகாவீரரும், புத்தரும், காந்தியடிகளும் பிறந்த மண்ணிலிருந்து ஆயுதங்கள் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன. அந்த ஆயுதங்களின் துணை கொண்டு ஈழத் தமிழர்களை மட்டுமல்ல தமிழ்நாட்டு மீனவர்களையும் சிங்கள வெறியர்கள் கொலை செய்கிறார்கள். நமது குடிமக்கள் நமது எல்லைக்குள்ளேயே படுகொலை செய்யப்படுவதைப் பார்த்த பின்பும் மன்மோகன் அரசுக்கு பதைப்பு வரவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர் அமைப்புகளும் கூட்டாகவும் தனியாகவும் போராட்டங்கள் நடத்திய பிறகுகூட மத்திய அரசு தன்னுடைய தவறைத் திருத்திக் கொள்ள முன் வரவில்லை.

காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்திற்கும் நேரு பெருமகனாரின் தொலை நோக்கு சிந்தனைக்கும் கொஞ்சமும் தொடர்பற்ற அரசாக மன்மோகன் சிங் அரசு விளங்குகிறது. நேருவின் காலத்தில் சூயஸ் கால்வாய் பிரச்சினையில் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் கைகோர்த்து எகிப்துக்கு எதிராக களம் இறங்கியபோது, இப்பிரச்சினையில் உலக நாடுகளின் கருத்தை திரட்டுவதற்காக வி.கே. கிருஷ்ணமேனன் அவர்களை நேரு தனது தூதுவராக அனுப்பினார். அதைப் போல, பிரதமராக இந்திரா காந்தி இருந்தபோது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து சிங்கள அரசுடன் பேசுவதற்கு மூத்த ராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதியை அனுப்பினார்.

நேருவோ இந்திராவோ சர்வதேச பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அதிகாரிகளை அனுப்பியதில்லை. ஆனால் மன்மோகன் சிங் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகளை இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண நம்பியிருக்கிறார். அவர்களைத்தான் அனுப்பி வைக்கிறார்.

ராஜதந்திர பார்வையும் தொலைநோக்குச் சிந்தனையும் அறவே இல்லாத இந்த அதிகாரிகள் இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விட்டார்கள். இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட இலங்கையில் எது நடந்தாலும் அது இந்தியாவையும் பாதிக்கும் என்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல் மன்மோகன் சிங் அரசு செயல்படுகிறது.

இந்த அரசின் தவறான அணுகுமுறைகளின் விளைவாக ஈழத் தமிழர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதோடு இந்தியாவுக்கு எதிரான நாடுகள் இலங்கையில் காலூன்றி நிற்கும் அபாயம் உள்ளது. நேருவும் இந்திராவும் சர்வதேச பிரச்சினைகளில் மிகவும் தேர்ந்த ராஜதந்திரிகளை தங்களுக்கு துணையாகக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் அணிசாரா நாடுகளின் தலைமை இந்தியாவைத் தேடிவந்தது.

ஆனால் இன்று சுற்றிச் சுற்றிவரும் செக்குமாடுகளைப் போல குறிப்பிட்ட சிந்தனை வளையத்திற்குள் சிக்கிக் கிடக்கும் அதிகாரிகள் தவறான ஆலோசனைகளை வழங்கி உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையைக் கெடுத்து விட்டார்கள்.

தமிழக மக்களின் கொதிப்புணர்வை இந்திய அரசுக்கு உணர்த்தி சரியான நடவடிக்கை எடுக்கும்படி தூண்ட வேண்டிய தமிழக முதல்வரும் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்களும் ஒப்புக்காக ஏதோ பேசுகிறார்களே தவிர உண்மையில் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யத் தவறிவிட்டார்கள். இவர்களின் இந்த மகத்தான தவறை வரலாறு பதிவு செய்துள்ளது. இன்றைய தலைமுறையும் நாளைய தலைமுறையும் இவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.

நன்றி: தென் செய்தி

Wednesday, October 29, 2008

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..!

மயிரில் மையிட்டு

உயிரில் பொய்யிட்டு வைக்கும்

நாகரீக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..


மூடிக் கிடத்தல்களை விட

ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து

அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண

அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..


வடித்துத் தீர்த்துக் களைத்த

இல்லாதார் வியர்வையுறிஞ்சி

உன் பித்தட்டிட்டு நிரப்பும்

உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..



உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்

பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்

மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..



வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு

வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்

அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே....!

Thanks to the Kavi.S.M.Junaid Hasani
www.junaid-hasani.blogspot.com

ஆதி திராவிடர்கள் மதம் மாறுதல்

ஐந்து மணிக்குத் தீண்டத்தகாதவன் 5.30 மணிக்குத் தீண்டத்தகுந்தவன்! - (பெரியார் சாத்தான்குளத்தில் 28.7.1931 அன்று ஆற்றிய உரை. ‘குடி அரசு' 2.8.1931)

நான் இந்து மதத்தைப் பற்றியோ, இஸ்லாம் மதத்தைப் பற்றியோ பேசுவது என்பதில் இரண்டு மதத்தினுடையவும் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்து பேசுவதாக யாரும் கருதிவிடாதீர்கள். அந்த வேலையை ஒரு பரீட்சை மாணவனுக்குக் கொடுத்து விடுங்கள். அதில் என்ன இருக்கின்றது என்பதில் எனக்குக் கவலை இல்லை. ஆனால், நான் பேசுவது என்பது, இரண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பான்மை மக்களிடையே இருந்து வரும் பிரத்தியட்சக் கொள்கைகள் சம்பந்தமான காரியங்களையும், அதனால் அவரவர்கள் பிரத்தியட்சத்தில் அடைந்துவரும் பலன்களையும் பற்றித்தான் பேசுகிறேன்.

அந்தந்த மதங்களில் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? அதனால் சமூகம் என்ன பயனடைந்திருக்கிறது? என்பன போன்றவைகள்தான் மதத்தின் மேன்மையை அளக்கும் கருவியாகும். அப்படிப் பார்ப்போமானால், அனேக விஷயங்களில் இந்து மதத்தைவிட இஸ்லாம் மதமே மேன்மையுடையது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. வீரம் இருக்கின்றது. வீரம் என்றால் லட்சியத்திற்கு உயிரைவிடத் துணிவது என்பதுதான். இஸ்லாம் மதத்தில் உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக்கூடாதவன், குளத்தில் இறங்கக்கூடாதவன், கோவிலுக்குள் புகக்கூடாத மனிதன் இல்லை. இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்துக் கொள்கையில் வேறு எங்கு ஒற்றுமையாய் இருந்தாலும் சமூக வாழ்விலும் கடவுள் முன்னிலை என்பதிலும், மனிதன் மிருகத்தைவிடக் கேவலமாய் நடத்தப்படுகின்றான். இதை நேரில் காண்கின்றோம். இதைத்தான் அன்பு மதம், சமத்துவ மதம் என்று இந்துக்கள் தைரியமாய்ச் சொல்லுகின்றார்கள்.

மதத் தத்துவ நூலை, வேதம் என்பதை இஸ்லாம் மதத்தில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியும், மலம் அள்ளும் தோட்டியும் படித்தாக வேண்டும்; பார்த்தாக வேண்டும்; கேட்டாக வேண்டும். இந்துமத வேதம் என்பதை ஒரே ஒரு சிறு கூட்டம் தவிர பார்ப்பனன் தவிர மற்ற யாவரும் அவன் பிரபுவானாலும், ஏழையானாலும், யோக்கியனானாலும், அயோக்கியனானாலும் சரி, ஒருவனுமே படிக்கவும் பார்க்கவும் கேட்கவும் கூடாது.

இஸ்லாம் கொள்கை மக்களை ஒன்று சேர்க்கிறது. இந்தியாவில் கொஞ்ச காலத்திற்கு முன் ஒரு கோடியைவிடக் குறைந்த எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இன்று 8 கோடி மக்களாய்ச் சேர்ந்திருக்கிறார்கள். இன்று யாவரையும், எப்படிப்பட்ட இழிவானவர் என்று இந்து மார்க்கத்தாரால் கருதப்பட்டவர்களையும் தனக்குள் சேர்த்துக் கொள்ளக் கையை நீட்டுகின்றது. இந்துக்களின் கொள்கையோ எப்படிப்பட்ட மேலானவன் என்று மதிக்கப்பட்டவனையும் உள்ளே விட மறுத்து, வாசற்படியில் காவல் காக்கின்றது; தன்னவனையும் வெளியில் பிடித்துத் தள்ளுகின்றது.

ஆதித் திராவிடர்களை நான், ‘இஸ்லாம் மதத்தில் சேருங்கள்' என்று சொன்னதற்காக அனேகம் பேர் என்மீது கோபித்துக் கொண்டார்கள். அவர்களைப்பற்றி நான் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்களுக்குச் சொந்த அறிவும் இல்லை; சொல்வதைக் கிரகிக்கச் சக்தியும் இல்லை. சிலருக்குத் தங்கள் மேன்மை போய்விடுமே தங்களுக்கு அடிமைகள் இல்லாமல் போய்விடுமே என்கின்ற சுயநல எண்ணம். ஏனெனில், மோட்சம் அடைவதற்காக என்று நான் ஆதித் திராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை; அல்லது "ஆத்மார்த்தத்திற்கோ' "கடவுளை அடைவதற்கோ' நான் அப்படிச் சொல்லவில்லை. ஆதித் திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்குச் சட்டம் செய்வது, சத்தியாக்கிரகம் செய்வது போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொன்னேன்; இனியும் சொல்கின்றேன்.

சட்டம் செய்வது கஷ்டம்; செய்தாலும் நடைமுறையில் வருவது கஷ்டம். சத்தியாக்கிரகம் செய்வதும் கஷ்டம்; செய்தாலும் வெற்றி பெறுவது சந்தேகம். இவற்றால் துன்பமும் தோல்வியும் கிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால், ஆதித் திராவிடர்களுக்கு இஸ்லாம் கொள்கையை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்வதில் என்ன கஷ்டம்? அதில் தோல்வியோ துன்பமோ ஏதாவது உண்டா? அல்லது, அன்னியருக்கு ஏதாவது கஷ்டம் உண்டா? அவன் ஆத்திகனாய் இருந்தால் என்ன? நாத்திகனாய் இருந்தால் என்ன? உண்மை இஸ்லாம் ஆனால் என்ன? பொய் இஸ்லாம் ஆனால் என்ன? உலகில் மதங்கள் ஒழிக்கப்படும்போது, இஸ்லாம் மதமும் ஒழியும்.

ஏன் கிறிஸ்து மதத்தைக் தழுவக் கூடாது? ஆரிய சமாஜத்தைத் தழுவக் கூடாது? கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி நான் சொல்ல வரவில்லை. நடைமுறையில் பறை கிறிஸ்தவன், பார்ப்பாரக் கிறிஸ்தவன், வேளாளக் கிறிஸ்தவன், நாயுடு கிறிஸ்தவன், கைக்கோளக் கிறிஸ்தவன், நாடார் கிறிஸ்தவன் என்பதாகத் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர். இஸ்லாம் மார்க்கத்தில் இவ்வித வேறுபாடுகள் இருக்கின்றனவா? கிறிஸ்தவ சகோதரர்கள் கோபிக்கக் கூடாது; வேண்டுமானால், வெட்கப்படுங்கள் என்று வணக்கமாய்த் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரிய சமாஜம் என்பதும் ஒரு வேஷந்தான்.

Tuesday, October 28, 2008

வாழ்க்கை என்பது என்ன?

தனது ஆங்கில பிளாக் பிரபலமடைந்திருப்பதால் இந்தியிலும் பிளாக் தொடங்க பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது பிளாக்கில் அமிதாப் பச்சன் எழுதியிருப்பதாவது:

நான் இந்தியிலும் எழுத வேண்டும் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆதரவும் அதிகரித்துள்ளது. இந்தி தெரியாத பலரும் கூட இதுகுறித்து எனக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது என்னைப் பெருமைப்படுத்தியுள்ளது, ஊக்கமளிப்பதாக உள்ளது.

ஆனால் யார் மீதும் இந்தியை திணிக்கக் கூடாது. ஆனால் நான் இந்தியில் எழுத வேண்டும் என்று பலரும் விரும்பினால் நிச்சயம் அதையும் நான் செய்வேன். இருப்பினும் தற்போதைய பிளாக்கை பலிகடாவாக்க மாட்டேன். அதற்கும் உறுதுணையாக எனது இந்தி பிளாக் இருக்கும்.

இரு பிளாக்குகளிலும் இடம் பெறும் விஷயங்கள் ஒன்றாகவே இருக்கும். எந்த மாற்றமும் இருக்காது. ஒன்றின் பிரதிபலிப்பாக இன்னொன்று இருக்கும்.

எனது உடல் பலவீனம் படிப்படியாக, அதேசமயம் வேகமாக சரியாகி வருகிறது. பல நாட்களுக்குப் போகாமல் இருந்த ரத்தம் இப்போது அனைத்து இடங்களுக்கும் போக ஆரம்பித்திருக்கிறது. இதனால் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த குறுகிய வாழ்க்கையில் நிறைய காற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. அறிவுத் தேடலுக்கு முடிவே இல்லை. நாளுக்கு நாள் அது ஆழமாகிக்கொண்டிருக்கிறது. ஒரு நாள் தடங்கல் ஏற்பட்டாலும் கூட அது விரக்தியை ஏற்படுத்தி விடுகிறது.

சிறிய விஷயமாக இருந்தாலும் கூட அதிலிருந்து ஒரு தொடக்கத்தை ஏற்படுத்த நாம் முயல வேண்டும். ஒரு துளி கூட ஒரு வாளியை நிரப்ப உதவும், ஆறுகளாக அது உருவெடுக்கலாம், ஏன் சமுத்திரமாகவும் கூட அது மாறலாம் என்று கூறியுள்ளார் அமிதாப்.