Sunday, January 11, 2009

என் சவ அடக்கத்தில் என்ன பேச வேண்டும்?





தன் சவ அடக்கத்தின்போது என்ன பேச வேண்டும் என்பதை மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறு கூறியுள்ளார்.“என் சவ அடக்கத்தின்போது என்ன பேசப்பட வேண்டும்? இன்று காலை அதைப்பற்றிச் சில வார்த்தைகளைச் சொல்ல விரும்புகிறேன்.

என் சவ அடக்கத்தின்போது நீண்டபொழுதைச் செலவிட வேண்டாம். சீக்கிரமே அது நடந்து முடியட்டும். என் சவ அடக்கத்தின் இறுதிக்கட்டமாக அனுதாப வார்த்தைகளைப் பேசுவதற்காக சிலரை நீங்கள் அழைத்து வரும்போது நீண்ட நேரம் பேசவேண்டாம், சுருக்கமாக உங்கள் உரை இருக்கட்டுமென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்காக எனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி எதுவும் குறிப்பிட வேண்டாம், அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.

பல்வேறு சேவைகளுக்காக முந்நூறு, நானூறு பரிசுகளைப் பெற்றவன் நானென்பதைக் குறிப்பிட வேண்டாம். அது அவ்வளவு முக்கியமில்லையென்று அவர்களிடம் சொல்லுங்கள்.அந்த நாளில் அவர்கள் மார்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றவர்களுக்குத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தானென்று குறிப்பிட வேண்டும்.

மார்டின் லூதர் கிங் ஜூனியர் எல்லாரையும் நேசிக்க முயன்றான் என்று சிலர் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.அந்த நாளில் பசித்தவர்களுக்கு உணவளிக்க நான் பாடுபட்டேனென்று நீங்கள் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன். நிர்வாணமாக நின்றவர்களுக்கு எல்லாம் உடையளிக்க உயிர் உள்ளவரை உழைத்தவன் நானென்று அந்தாளில் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.

சிறையில் வாடியவர்களை எல்லாம் உயிர் உள்ளவரை நான் தேடிச்சென்று பார்த்து ஆறுதல் கூறியவன் என்று நீங்கள் என்னைப்பற்றிக் குறிப்பிட வேண்டுமென்று விரும்புகிறேன்.மனித குலத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தவன் நானென்று அந்த நாளில் என்னைப் பற்றி நீங்கள் குறிப்பிட வேண்டும்.

நீதிக்காகத் தமுக்கடித்தவன் நானென்று தாராளமாகச் சொல்லுங்கள். உலக அமைதிக்காக தமுக்கடித்தவன் நானென்று சொல்லுங்கள்.”

No comments: