Wednesday, October 29, 2008

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..!

மயிரில் மையிட்டு

உயிரில் பொய்யிட்டு வைக்கும்

நாகரீக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..


மூடிக் கிடத்தல்களை விட

ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து

அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண

அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..


வடித்துத் தீர்த்துக் களைத்த

இல்லாதார் வியர்வையுறிஞ்சி

உன் பித்தட்டிட்டு நிரப்பும்

உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..



உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்

பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்

மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே..



வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு

வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்

அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே....!

Thanks to the Kavi.S.M.Junaid Hasani
www.junaid-hasani.blogspot.com

No comments: