Showing posts with label கருணாநிதி. Show all posts
Showing posts with label கருணாநிதி. Show all posts

Friday, January 30, 2009

ஜெயலலிதா விடுதலைப்புலிகளுக்கு எப்போதும் எதிரியா?





அவர் எப்படிப்பட்ட புளுகர் என்பதைத் தெரிந்துகொள்ள, இதோ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு 4.10.1990 அன்று செல்வி ஜெயலலிதா சிறப்புப் பேட்டியொன்று அளித்துள்ளதைப் படித்துப் பாருங்கள்!





சிங்கள ராணுவமும், காவல்துறையும் இலங்கையில் தமிழ் இனத்தை அழிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விடுதலைப்புலிகள் இயக்கம் துணிவான போராட்டத்தில் ஈடுபட்டு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போர் நடத்தி வருகிறது. கடந்த இரு மாதங்களில் தமிழ்நாட்டில் புகார் கூறும் அளவிற்கு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை.





இப்போது விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்துப் போர் நடத்தி வருகின்றது. இது ஓர் அதிதீரமான செயல். விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டால் இலங்கையில் உள்ள தமிழினம் முழுவதும் அழிந்துவிடும் என்பதை நாம் மனதில் நிறுத்தவேண்டும். விடுதலைப்புலிகளின் வெற்றி இலங்கைத் தமிழர்களின் வெற்றியாகும். அவர்களுக்கு உதவும் வகையில் எதுவும் செய்வதற்குப் பதிலாக தமிழக முதலமைச்சர் கருணாநிதி தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.





இலங்கைத் தமிழர்களின் கதிபற்றி பிரதமர் வி.பி. சிங் எந்தவிதக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை. மாறியுள்ள சூழ்நிலையில் ஒரே மருந்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை ஒட்டுமொத்தமாக ஆதரிப்பதுதான். தனது அதிகாரத்திற்கு உட்பட்ட இயன்ற அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் கருணாநிதி வழங்கவேண்டும். மத்திய அரசு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்பட்ட விதிகளின்படி சமாதானத் தீர்வு ஒன்றைக் காணவேண்டும். அல்லது விடுதலைப்புலிகளை இந்திய அரசு நூற்றுக்கு நூறு ஆதரிக்கவேண்டும்.



செய்தியாளர்: விடுதலைப்புலிகள் இயக்கம் அமைதி ஒப்பந்தத்தை நிராகரித்துவிட்டது. ஆனால், நீங்கள் இன்னமும் விடுதலைப்புலிகளை ஆதரிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களே?





ஜெயலலிதா: நம்முடைய முக்கிய நோக்கம் என்ன? தமிழ் இனம் அழிக்கப்பட்டு விடக்கூடாது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இனப் படுகொலையிலிருந்தும் பூண்டோடு ஒழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தவறுகளைச் செய்துள்ளனர். ஆனால், நாம் விடுதலைப்புலிகளை ஆதரிக்காவிடில் அது இலங்கையில் தமிழ் இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும். அதை நாம் அந்த நோக்கோடு பார்க்கவேண்டும்.





செய்தியாளர்: எம்.ஜி.ஆர். செய்த அளவுக்கு இல்லாவிட்டாலும், கருணாநிதி விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்யவில்லையா?





ஜெயலலிதா: அதற்கான எந்தத் தடயத்தையும் நான் காணவில்லை. ***





இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் மாத்திரமல்ல, 8.10.1990 தேதியிட்ட இந்து இதழிலே ஜெயலலிதா விடுதலைப்புலிகளைப்பற்றி ராஜீவ் காந்தி அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே குறிப்பிட்ட வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.



அவை வருமாறு:- இலங்கையில் தமிழர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாததற்காக ஜெயலலிதா மத்திய அரசையும், மாநில அரசையும் குற்றஞ்சாட்டினார். இலங்கை அரசுக்கு எதிரான தற்போதைய போராட்டத்தில் விடுதலைப்புலிகள் தோல்வி அடைந்தால் அத்தீவில் உள்ள தமிழினம் முழுவதுமே அழிந்துவிடும் என்று ஜெயலலிதா எச்சரித்தார்.





இது மாத்திரமல்ல, 29.4.1991 தேதிய இந்து நாளேட்டுக்கு ஜெயலலிதா பேட்டியளித்தபோது, பங்களாதேஷ் பிரச்சினையில் இந்திரா காந்தி செய்ததைப்போல ராணுவ நடவடிக்கைபற்றி இந்தியா சிந்தித்தால், அதில் தவறு எதுவுமில்லையென்று நான் கருதுகிறேன் என்றும் கூறி அது வெளிவந்துள்ளது.





ஜெயலலிதாவிற்கு இன்று நெருங்கிய ஆதரவாளராக உள்ள சுப்பிரமணியம் சுவாமி 21.7.1995 அன்று ஜெயின் கமிஷன் விசாரணையிலே கூறியது என்ன தெரியுமா?





ராஜீவ் காந்தியின் கொலைக்கு முன்பும், பின்பும் ஜெயலலிதா விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரச்சாரகராகவே விளங்கினார். ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டாமென்று ஜெயலலிதாவிற்கு விடுதலைப்புலிகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்திருந்ததால், அ.தி.மு.க.வும், காங்கிரசும் தேர்தல் கூட்டணி வைத்திருந்தபோதிலும், ராஜீவ் காந்தியுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்துகொள்ளவில்லை, விமான நிலையத்திலே ராஜீவ் காந்தியை வரவேற்கவும் செல்லவில்லை.





விடுதலைப்புலிகளுக்கு இந்த அளவிற்கு ஆதரவாளராக இருந்தவர் தற்போது விடுதலைப்புலிகளுக்குத் தான் என்றைக்கும் எதிரியாக இருந்துள்ளதாக கடைந்தெடுத்த பொய்யைக் கூறி யாரை ஏமாற்ற முயலுகிறார்?



நன்றி: "முரசொலி

Sunday, January 4, 2009

தமிழர்களைவிட சிங்கள வெறியர்கள்தான் முக்கியமா? : ராமதாஸ்








டெல்லியில் திட்டம் தீட்டி செயல்படும் அதிகாரிகளுக்கு தமிழ் மக்களை விட இலங்கை போர் வெறியர்கள்தான் முக்கியமானவர்களா? என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, டாக்டர் ராமதாஸ் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-



மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து நீங்களும், வெளியுறவுத்துறை மந்திரியும் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். என்றபோதிலும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் ஆயுதப் படைகள் நடத்திவரும் கொடுமைகளையும், அதன் விளைவாக முதல்-அமைச்சர் கருணாநிதி வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளபடி `ஒவ்வொரு நொடியும் ஒரு தமிழன் உயிர் இழப்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மணிக்கு மணி நிலைமை மோசமடைந்து வருகிறது.



மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாற்றப்பட்டு வருகிறது.



இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய `உடனடி ஆபத்து' நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையை, நிïயார்க்கில் இருந்து செயல்படும் இனப்படுகொலைத் தடுப்புத் திட்ட அமைப்பின் அறிக்கையில் சேர்த்திருப்பது, இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியாகியிருக்கும் கடும் கண்டனமாகும்.
நிலைமை மோசமாக இருந்தபோதிலும், இலங்கை அரசு கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு செயல்படாமல் இருப்பதே இதற்குக் காரணம்.

கடலுக்கு அப்பால், தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதை, ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட இந்தியத் தமிழர்களின் கவுரவத்தையும், சுய மரியாதையையும், கொழும்பில் உள்ள அடக்குமுறை அரசின் முகவர்களுடன் கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெல்லியில் உள்ள தப்பெண்ணம் படைத்த சில அதிகாரிகள் இனியும் காலில் போட்டு நசுக்க முடியாது. டெல்லியிடம் `சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சிப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு அவர்களைக் குறுக்கிவிட முடியாது.



இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. டிசம்பர் 4-ந் தேதி பிரதமரைத் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசிய 2, 3 நாட்களுக்குள், இலங்கையின் போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகா திமிர்த்தனமாகப் பேசினார்: ``போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை ஒருபோதும் இந்திய அரசு வலியுறுத்தாது. தமிழ்நாட்டின் அரசியல் `கோமாளிகள்' கூறுவதையும் அது செவிமடுக்காது'' என்றார்.



முன்னதாக, மத்திய அரசு செயல்பட வலியுறுத்தி கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலர் ராவ்னி தாக்கூர் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று டெல்லியில் இருந்து கொழும்புக்குச் சென்றது.



மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதை செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டெல்லிக்கும், கொழும்புக்கும் இடையே கமுக்க உடன்பாடு இல்லை என்றால் இவை நடந்திருக்காது.
இலங்கை தொடர்பாக இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பிரதமரான நீங்களே கூறியிருக்கிறீர்கள்:




``ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருக்கிறது'' என்று நாடாளுமன்றத்துக்கு அளித்த ஆண்டு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: ``போர்ப்படைத் தீர்வு இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.



எனினும், இலங்கை அரசு வெறித்தனமாகப் பின்பற்றி வரும் `போர்ப்படைத் தீர்வு'க்கு முடிவு கட்டுவதற்கும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக செய்திருக்கலாம்.



டெல்லியின் அக்கறையற்ற, உணர்ச்சியற்ற அணுகுமுறையையே இது காட்டுகிறது. ஏனெனில், 'இனப் படுகொலை வெறியாட்டத்தால்' பாதிக்கப்படுவோர், உதவிக்கும் குரல் கொடுப்பதற்கும் வழியற்ற தமிழர்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.



குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், பொதுவாக இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். டெல்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற கொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களைவிடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா?




இந்த கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கவுரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதை இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா? காலம் கடப்பதற்கு முன்பு எங்களுக்கு விடை தேவை. நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.