Showing posts with label குர்ஆன். Show all posts
Showing posts with label குர்ஆன். Show all posts

Tuesday, June 24, 2008

அறிவியல் வளர்வதற்கான வழி

இஸ்லாமிய அறிவியக்க இதழான சமரசம் மே 2008 இதழில் 33 ஆம் பக்கத்தில் A. சம்ஷாத் எழுதிய ‘அறிவியல் தேர்ச்சிகொள் ‘ என்ற கட்டுரை வெளியாகியிருக்கிறது. ‘நாம் [இஸ்லாமியர்கள்] மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று பிரித்து வைத்ததனால்தான், வழிகாட்டியாக இறக்கி வைத்த குர் ஆனை பொருளறியாமல் படித்துவிட்டு திருப்தி அடைந்ததனால்தான் வாழும்வழி தெரியாமல் போய்விட்டோம். எத்தனை பெரிய நஷ்டம் இது?’ என்று கட்டுரை ஆசிரியர் சொல்கிறார்.

‘அவனே வானத்திலிருந்து மழையை பொழியச்செய்கிறான். அதிலிருந்து உங்களுக்கு அருந்தும் நீரும் இருக்கிறது. அதிலிருந்து [உங்கள் கால்நடைகளை]மேய்ப்பதற்கான மரங்கள் [மற்றும் புல்பூண்டுகளும் உருவாகி]அதில் இருக்கின்றன. அதனைக் கொண்டே [விவசாயப் ]பயிர்களையும் ஒலிவ மரத்தையும் பேரீத்த மரங்களையும் திராட்சைக் கொடிகளையும் இன்னும் எல்லாவகைக் கனி வர்க்கங்களையும் அவன் உங்களுக்காக விளைவிக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கும் மக்கள் கூட்டத்தாருக்கு [தக்க] அத்தாட்சி இருக்கிரது. இன்னும் அவனே இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் உங்கள் [நலன்களுக்கு] வசபப்டுத்திக் கொடுத்துள்ளான். அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப்படியே வசப்படுத்தபப்ட்டுள்ளன. நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக்கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு[தக்க] அத்தாட்சிகள் இருக்கின்றன… இன்னும் பூமியில் அவன் அப்டைத்திருப்பன பல விதமான நிறங்களை உடைய [செடிகொடிகள் பிராணிகள் பறவைகள் போன்ற]வையுமாகும். நிச்சயமாக இதில் [அல்லாஹ்வின் அருள்கொடைகளை] நினைவுகூரும் மக்களுக்கு தக்க அத்தாட்சி உள்ளது’

இந்த வசனங்களைப்போல எத்தனையோ நினைவூட்டும் வசனங்கள். அல்லாஹ் தான் அருளியுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மகக்ளை சிந்திக்கவும் ஆய்ந்தறியவும் நினைவுகூரவும் தூண்டுகின்றான்.இதுவல்லவா உண்மையான கல்வி? — என்று கூறும் கட்டுரை ஆசிரியர் நவீன அறிவியல் வளர்வதற்கான வழியை விஞ்ஞானம் என்ற தலைப்பில் இவ்வாறு கூறுகிறார்.

‘எத்தனையோ சமீபத்திய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் குர் ஆனின் வசனங்களோடு ஒத்துப்போவதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் கண்டுபிடிக்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன அருள் மிக்க குர் ஆனை கையில் வைத்திருப்பவர்கள் சிறு வயதில் இருந்தெ பிள்ளைகளுக்கு இறைவசனங்களின் பொருளைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினால் நூறில் பத்து பிள்ளைகளாவது விஞ்ஞானிகளாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் வர வாய்ப்பு உள்ளது. எதையாவது கண்டுபிடித்துவிட்டு இது குர் ஆனிலும் உள்ளது என்று சொல்வதை விட குர் ஆன் வசனங்களை ஆராய்ந்து இதுவரை கண்டுபிடிக்காதவற்றைக் கண்டுபிடிக்கலாமே…”

இந்தக் கடைசி வரியே கட்டுரையின் சாரமாக எடுத்து முதலிலும் கொடுக்கபப்ட்டுள்ளது. இக்கட்டுரை இவ்வாறு முடிகிறது ‘…இன்னும் மருத்துவம் வானவியல் இயற்பியல் கணிதம் இவற்றில் எல்லாம் குர் ஆனின் மூலம் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கலாம். நமக்கு முன் வாழ்ந்த முஸ்லீம்களில் விஞ்ஞானிகளும் கணித மேதைகளும் ஆராய்ச்சியாளர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் உலகம் இருட்டடிப்புசெய்துவிட்டது. அதன் பின்பு ஒரு நீண்ட இருண்ட காலம். ஆனால் இருள் எப்போதும் நிரந்தரமானதல்ல. இருளுக்குப்பின் விடியும் என்பதுதான் நியதி. இறையருளால் இனிவரும் தலைமுறைகள் எழுச்சி பெற்று தங்கள் கல்வியை குர் ஆனில் இருந்து தொடங்கட்டும்! மீண்டும் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் மலரட்டும்!